It கலைமகன் கவிதைகள்: டிசம்பர் 2009

திங்கள், 7 டிசம்பர், 2009

திருக்குறள்


ஒன்றே முக்கால் அடியாலே
ஒப்பற்றுத் திகழும் நூலிதாம்
என்றும் பெருமை தான்கொண்டு
எடுப்பாய்த் திகழும் நூலிதாம்!

இரண்டே யடிகளில் தானின்று
இதயச்சுத்தி செய்வதுவாம்
அருமை பெருமை தான்கொண்டு
அகிலத்தாரைக் கவர்ந்ததுவாம்!

பற்பல மொழிகளில் வெளியாகி
பகலவ னொளியாய்த் திகழ்வதுவாம்
நற்போதனைகள் பலஈந்து
நவில்தொறும் இனிமை பயப்பதுவாம்!

சாதிமத பேதம் அழித்தொழிக்க
சத்தியாய் நிற்பது இதுவுந்தான்
ஓதிடுவோம் நாம் என்றென்றும்
ஒப்பிலா ஈரடி வெண்பாதான்!

கலைமகன் பைரூஸ்