It கலைமகன் கவிதைகள்: நவம்பர் 2009

வியாழன், 19 நவம்பர், 2009

என்னில் நீ!




அதிகாலை துயிலெழுந்து
ஆண்டவனை உள்மனதில்வைத்து
இங்கிதமாய உன்நினைவுகளொடு
ஈங்கு நான் உயிர்மூச்சுவிடுவதெலாம்
உந்தன் அன்பு என்றும்கிடைத்திடவேண்டி...!
ஊடல்கொள்வாய் சிலபோது என்னில்
என்றாலும் நிலவாய் நீயேதொடர்கிறாய்...
ஏற்றம் உனில்என்பேன் நான் – இதனை
ஐயமின்றி உரத்துரைப்பேன் நான்
ஒளிவடிவானதென்னில் உன்வதனமடி
ஓய்வின்றி உனையே எண்ணுதுள்ளம்!
ஔவியம் நீக்கி வாழ்வோம் நாமே!

காரணமின்றியே கோபம்கொள்வாய்
சடுதியாய் எனில்வீழ்ந்து இன்பந்தருவாய்
தப்பேசெய்யாமல் நீ தப்பென்பேன் சிலபோது
பல்லிளித்து சொல்லாடுவாய் நீயென்னில்!

ஞாலமே உன் அன்பிலடி பெண்ணே
நானிலமே எமில் காணவேண்டும் ஆதர்சம்
முத்தான சத்தும்சொத்தும் நீயேகண்ணே!

யாண்டும் எமில்வேண்டும் அன்பு - அடீ
வட்டமிடவேண்டும் என்றும் நீயெனையேதினம்!

ஆற்றல்மிக்கது உந்தன் கண்ணீர் துணையே
ஈட்டியாய் தைத்திடத்தெரியும் சிலபோதுனக்கு
ஊடல் கூடலில் அன்பைத் தருதேவுயிரே
ஏனோ நானேயறியாது ஊடலுனக்கு?
ஐயம்நீக்கு நானேயுந்தன் சீவன்!
ஓந்திநானல்லன் ஒட்டிவாழ்வோம் நாமே!

ஆசைகள் சில பாய்ந்துவரும்போது
ஈரைந்தடி நகர்ந்திடுவாய் நீயே
ஊடல்கொள்வேன் ஒட்டிடுவாய்நீ
ஏற்றம்மிக்க என்கண்ணகிநீயே
ஐயமின்றி புகழ்ந்துரைத்தேன் உனை
ஓயாமல் உனைத்தொடரும் நிழல் நானே!

- கலைமகன் பைரூஸ்
நன்றி: ஒருநாள் ஒருகவிதை சனிக்கிழமை,14 நவம்பர் 2009