It கலைமகன் கவிதைகள்: ஆகஸ்ட் 2010

ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

வருக ஈகைத் திருநாளே!

திங்களொன்று நோன்பு நோற்று
தராவீஹ் தஸ்பீஹ் முறையாய்செய்து
இங்கிதமாய் சுற்றத்தொடு சேர்ந்தமர்ந்து
இனிதாய் இப்தார் செய்திட்டோமே!

அதிகாலை துயிலெழுந்து - தொழுது
அன்பாய்க்கூடி ஸஹர்செய்து - பின்
கதிமிகத்தந்திடும் ஸுப்ஹும் தொழுது
குர்ஆன் ஓதிட்டோமே திங்களிதில்!

 செய்ததவறுக்காய் தேம்பியழுது -நம்
தேகமெங்கும் சேர்ந்திட்ட பவக்கரைநீங்கிட
பெய்யும்மழையாய் அருள்தனைவேண்டி
படைத்தவனிடம் ஏந்தினோமே கை!

வாடிடும் ஏழைகட்கு வாரிவழங்கி
வல்லானருளை மேலாய்ப்பெற்று
தேடிட சுவர்க்கம் செய்தன நல்லன
தரணியில் ரமழானை தரமாயேற்றே!

எனக்கே சொந்தமீதென்ற இறைக்கு
ஏந்தினோ முயர்வாய் அதனை - நாம்
மனங்களை இணைப்போம் ஒன்றாய்!

இல்லாமையொழித்து இனிதுமகிழ்ந்து
இனத்தொடு ஒட்டி என்றுமிருந்திட
நில்லாத நிலத்தினின் நல்லனசெய்திட
நலமேந்தி வருக ஈகைத் திருநாளே!

அறையிலடங்கி நிற்கும் வனிதைக்கும்
அழுதுநிற்கும் விதவைக்கும் - அன்பாய்
கறையிலா ஆடவர் கிடைத்திட இன்று
கருத்துக்கினிய பெருநாளே தூதேந்திவா!

உயர்ந்தோர் தாழ்ந்தோர் பேதம்நீக்கி
உத்தமநபியின் ஸுன்னாவையேற்று
கயமைநீக்கி நற்கருமம் செய்திட
கருணைமழை பொழிந்துவா பெருநாளே!

நன்றி :
 ஒரு நாள் ஒரு கவிதை
வார்ப்பு

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

ஓடி விளையாடு

ஓடிவிளையாடு நீ - ஓய்ந்திருக்காது விளையாடு
ஒருநாள் முடிந்திடும் மூச்சினை யெண்ணாது
துடிதுடிப்பாய் விளையாடு! துடிதுடிப்பாய் ஆடு!
தூங்கியபின் ஆட்டமில்லை – எண்ணாது ஆடு!

கனவுகள் நிஜமாகுமென நினைத் தாடுகிறாய்!
கண்டவரையெலாம் கரண்டையின்கீழ் எடுத்திட
ஊனமனங்கொண்டாடுகிறாய் - நீயாடு நீயாடு!
உலகமுந்தன் பாடைதூக்கிடும் நாளெண்ணாதாடு!

யானுயர்ந்தவ னெனநினைந்தே உதைக்கின்றாய்நீ
யாவுமறிந்தவன் நிலையெண்ணா துதைக்கின்றாய்!
வானும்வசமாகும் விண்மீனும் கீரிடம்தரிக்கு முனக்கு
வாழ்க்கை – பார் ஏதெனநீ யுணருங்காலே! உதைநீ!

சாதிகளி லுயர்ந்தவன் நீயென்று உதைக்கின்றாய்!
சாதியென்ன சாதி உந்தனுக்குள் எங்கேயோகம்?
நீதியை நிலத்தினி னழித்திட உதைக்கின்றாய்நீ
நிலையிலா வாழ்வின் முடிவேதென அறியாதுநீ!

ஒற்றைப் பந்தின் வாழ்வன்னது வாழ்க்கை – அது
ஓய்ந்திடும்வேகமறியாது உதைத்தாடுகிறாய்!
இற்றைப்பொழுதில் உந்தனாட்டம் கண்டுசிரித்திட
இருக்கின்ற சாரார் எண்ணி யாடுகிறாய் –நீயாடு!

இழுத்தடிப்பதில் தப்பேது உனைப்பந்தாடுவார்தனை!
இழுத்தடிப்பதில் தப்பேது உனையிகழ்வார்தனை!
வீழ்ந்துமடிந்தாலும் ஆகும் வீணரை வீழ்த்திடஆடின்
வம்புக்கும் வீம்புக்குமாடின் நீகண்டதெலாம் பூச்சியமே!

-கலைமகன் பைரூஸ்
இலங்கை

நன்றி:
  • முத்துக்கமலம்
  • வார்ப்பு
  • ஒருநாள் ஒரு கவிதை
  • பூங்காவனம்