It கலைமகன் கவிதைகள்: மே 2012

செவ்வாய், 29 மே, 2012

அவள்!

ஐனுல் ரிஸ்னா ரழீன் என்ற சகோதரி எழுதியிருந்த ஆங்கிலக் கவிதையொன்றைக் கண்டு, என்மனம் துள்ளியது. அக்கவிதை போலும் தமிழில் எழுதினேன் கவிதை.
தினமும் நான்
கல்லூரியிலிருந்து
பாதையைக் கடக்கும்போது
காண்கிறேன் அவளை!
கருணை ஒளிவீசுகிறது
அவளது
சிறிய கண்கள்!
ஏதோ சொல்ல நினைக்கின்றன
அவை!

அவளோ
என்னைப் போன்ற
சிறுமி!
ஆனால்
என்னிலிருந்து வேறுபடுகிறாள்
அவளோ
எப்போதும் இருப்பது
சாலை ஓரத்தில்...!

அவள்
தெருவீதியில் இருக்க
கடந்து செல்கின்றன
ஆயிரமாயிரம்
கண்கள்!
ஆனால்
ஒரு “செக்க“னாவது
தரித்துச் செல்வாரில்லை!
அவள்
ஏதோ பேச நினைக்கிறாள்!!

அவளுக்கு
உற்ற துணை யாருமில்லை
நண்பர்களில்லை
ஆனால்
அவளைப் பற்றி
என் மனம்
ஏதோ பேசுகிறது!
அவளுக்காக
உதவ வேண்டுமென்று!

தினந்தோறும்
அவளையே நான் நினைக்கிறேன்
அவளது கருணைக் கண்கள்
நிழலாடுகின்றன!
அவளது சிந்தனையில்
மாற்றம் ஏற்படுத்த
என் மனம்
ஏங்குகிறது!
அவள் வாழ்வில்
புதியதொரு பக்கத்தை
புரட்ட மனம்
விரும்புகிறது!

நிச்சயமாக
நான் அவளுக்கு உதவினால்
அவள்
யாருடனும் இல்லாத
அன்பைச் சொரிவாள்!
அவளுக்காக
நான் பிரார்த்திக்கிறேன்!
அவளும்
நானாக இருக்க....!
-கலைமகன் பைரூஸ்

வியாழன், 24 மே, 2012

இன்பக் களிப்பினிலே....!

பயின்றிடும் தோறும் பண்பினை வளர்த்திடும்
பகலவ னொளியாய் பாங்காய் நம்மொழி
உயர்ந்திட தமிழினம் உணர்வுடன் வாழ்ந்திட
உயரிய மொழியாய் எங்கள் தமிழ்மொழி! (2)

கனிந்திட வுளங்கள் கனிச்சுவை தந்திடும்
குறையிலா முத்தமிழ் ஏடுகொள் நம்மொழி
நனிமிகு சிலம்பும் மணியும் வளையலும்
நேராம் குண்டல முடைத்தாய் நம்மொழி!(2)

பொழிவுடன் விளங்கும் பலமுடன் திகழும்
பனிமலர் அன்னக் கோலத் தமிழ்மொழி
குழலிசை யெங்கனும் குவலயம் கண்டிட
கருத்துடன் திகழும் செம்மொழி எம்மொழி!

கலைகள் பற்பல பேராய்த் தந்திடும்
கனிமொழி எங்கள் கற்புடைத் தமிழ்மொழி
நிலையினிற் குன்றாய் நிமிர்ந்தே நின்றிடும்
நெஞ்சினி லின்பகடலென நற்றமிழ் மொழியே!(2)

என்றும் எம்மொழி எதிலும் எம்மொழி
எடுப்பாய்த் திகழ்வது வீறுகொள் தமிழ்மொழி
செம்புலமெங்கனும் தனித்தமிழ் காண்போம்
செழிப்புடன் இன்பக் களிப்பினில் யாமே!

தேனினும் உயரிய தீம்மொழிகண்டிட
தேகமெங்கனும் தமிழ்மொழி நின்றிட
கூனே இல்லாதெழுந்திட முடிந்திடும்
தமிழைக் கண்டேன் இன்பக் களிகொண்டேனே!(2)


-கலைமகன் பைரூஸ் நன்றி - இலண்டன் வானொலி (கவிதை நேரம்) 2012 - 05 - 24

புதன், 23 மே, 2012

வசந்தம் தொலைக்காட்சி நேர்காணல்

 

முகநூலில் வலம்வரும்போது கவிஞர் அஸ்மின் என்னுடன் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளும் போது, அவராக எனை தொடர்புகொள்வதாகச் சொல்லி, குறுகிய காலத்திலேயே எனை வசந்தம் தொலைக்காட்சி நிலையத்திற்கு அழைத்துப் பேட்டி கண்டார். அவருக்கும், அன்று அவர் இல்லாத நிலையில் எனைப் புன்முறுவலுடன் அழைத்து நேர்காணலுக்கு ஆயத்தப்பத்திய கவிஞர் மாவனல்லை ரிஷான் ஷெரீப் அவர்களுக்கும், பேட்டி கண்ட நாகபூசணி கருப்பையாவுக்கும் எனது நன்றிகள்!

ஞாயிறு, 20 மே, 2012

விடை கொடு!

- பாத்திமா லரீபா பொல்கொல்லை -

பேசுவதற்கு ஆயிரம் வார்த்தைகளுண்டு- என்னிடம்
கேட்பதற்கு ஓராயிரம் வினாக்களுண்டு- உன்னிடம்
கேவலமாய் என்னை எண்ணிவிட்டதால்- நீ
கோபம் கொள்கின்றேன் என்னிடமே - நான்

கண்களில் கனவுகளாய் சுமந்தேன் உன்னை- அன்று
கண்ணோரம் சுமக்கின்றேன் கண்ணீர் துளிகளாய்- இன்றும்
நேற்றும் மட்டுமே அறிந்த உன்னதமான உறவு- அன்று
காயங்களை மட்டுமே எனக்குப் பரிசளித்தது- என்றும்

எனக்காய் தந்த சந்தோசங்கள்- நீ
என்றும் என் நினைவில் மறவாதவை - அவை
எதிரியாய் பார்க்கவில்லை என்றும் உனை- நான்
ஏணிப்படியாய் வளர வாழ்த்துகின்றேன்- உன் வாழ்க்கை

விடைபெறுகின்றேன்- நான்
விடியலை நோக்கி - அல்ல
விதி எனக்களித்த - உன்
விரக்தியை நோக்கி....

இன்றைய தினகரன் வாரமஞ்சரியில் (20.05.2012) பிரசுரமாகியுள்ள கவிதை

வெள்ளி, 18 மே, 2012

ஈழத்திசை பரப்பு- சைபா பேகத்தின் குரலில்




சிறப்பான கவிதை பைரூஸ் . உங்களது ராஜேஸ்வரி பற்றிய கவிதையும் மிகவும் ஆழமானதாய் அமைந்திருந்தது. மனப்பூர்வமான வாழ்த்துகள். 2012/05/18
Najmul Hussain

ஞாயிறு, 13 மே, 2012

கானக் குயிலுக்கு எந்தன் கவிதைக் குரல்

இலங்கை மண்ணுக்குப் புகழ்பெற்றுத்தந்த பெண் அறிவிப்பாளர் திருமதி இராஜேஸ்வரி சண்முகம் அவர்களது ஞாபக விழாவில் பாடப்பட்ட எனது கவிதை
இடம்: கொழும்பு வெள்ளவத்தை தமிழ்ச் சங்கம் (சங்கரப்பிள்ளை மண்டபம்) திகதி: 13.05.2012 காலை 9:30 மணி


கானக் குயிலுக்கு எந்தன் கவிதைக் குரல் -வெலிகம கலைமகன் பைரூஸ்
தமிழ்வளர்க்கும் தமிழ்ச்சங்கந்தனிலே - இந்நாள்
தாய்நிலமீதில் புகழ்கோத்த பெருமாட்டிதனையுன்னி
நிமிர்ந்ததமிழ் வளர்க்கும் பல்லோர்க ளவையில்
நிழற்கவியான் கவிதொடுக்க நிகரிலாஇறையே நீயேதுணை!

கானக்குயிலினுக்கு கானமிசைக்கு மிந்நாள்
கரையிலாத் தமிழ்த்தென்றல் அலிஅக்பர் அரசோச்ச
இன்றமிழில் கவிபொழிய வந்துள கவிமன்னர்காள்
இங்கிதமா யமர்ந்துள்ள புலவோர்கள் பல்லோரே!

தாய்த்தமிழில் நான்கொண்ட காதலா லின்று
தரமான அறிவிப்பா லெமையெலாம் கோத்த
தாயன்ன அம்மாவை நெஞ்சினி லேற்றி
தருவேன்கவி, குறைபொறுத்தருள்வீர் சான்றோரே!

இதமான குரல்மீது பல்லோரும் மெய்ம்ம்மறக்க
இரவாத புகழ்கொண்ட இராஜேஸ்வரி யம்மாவின்
பதமான நற்றமிழை நானுன்னி னேனன்று - இன்று
பார்மீதி லில்லாமை யாலின்று துயர்கடலா யானேனே!

பெண்மைக்கு புகழ்கோத்த பொதிகைத்தென்றலாளின்
பாமயமான திரைத்தொகுப்புதா னயந்தே னீரடியில்
கண்ணகி நாடகமீதில் களிகொண்டேன் - மெய்யாய்
கண்ணுக்குள் நிழலாடும் கண்ணகிதானே நீயம்மா!

சில்லையூராரின் சிலம்பொலியில் மின்னித்தான் நின்றீர்
சிருங்காரம் இணைந்திடவே நகைச்சுவையும் தந்தீர்
சொல்லவியலா அலங்காரமே குரல்வளந்தான் அம்மா
சாகாவரம்பெற்ற சொல்லின்செல்வி நீங்கள் தானம்மா!

கண்மீது அருவியெலாம் காணுங்கால் உங்கள்குரல்
காந்தமாய் காட்டுதம்மா கண்ணீர்தான் பெருக்கி -இம்
மண்மீது மீண்டுமொரு இராஜேஸ்வரி அம்மாநீர் வருவீரோ
மொழிவளர்செல்வியே நீங்களின்றி சொல்வளமேனோ அம்மா!

மதுரக்குரலால் கட்டிப்போட்டீ ரெமையெலாம் - சீராய்
மணமான நற்குணத்தோ டென்றும் நின்றீர் பேராய்
நயமான உறவுக்குள் எமையெலாம் சேர்த்தீர் நீராய்
தடம்மாறாத் தங்க மனத்தாள் நீயல்லவோ அம்மா!

விடியலை நோக்கி விதவிதமாய் வந்தெமை
வானொலிக் குயிலாள்நீங்கள் வாழ்த்தியே நின்றீர்
கொடியோர்கள் செந்தமிழில் குற்றங்கள் காணுங்கால்
கானத் தமிழில் கானமிசைத்த சொலள்வல்லாள் நீயேஅம்மா!

தமிழை மெருகேற்றும் பல்லோர்க்குள் நீயேஅம்மா
தங்கத் தமிழை உளமீதுபொலிந்த கோடைமழை
நிமிர்ந்தே நடைபோடும் நற்றமிழின் பெருங்கலையே
நயந்தேன் நானுந்தான் கட்டுண்டேன் உந்தனிசைமீது!

யாழினிது குழலினி தென்பர் மாந்தர் -இன்று
யாழினிலு முயர்குரல் தனைக்கொண்ட வுங்கள்
மொழியின்றி மெய்வாடி நின்றே இன்று
மொழிவளர்க்கும் சங்கமீது சங்கமித்தோமே!

மண்ணுக்குப் புகழ்கோத்த வுங்கள் மணம்
மண்ணெங்கு தான்மறக்கும் - வாசம்தான்வீசும்
பண்பான பாங்கியாயும் பல்லோர் மனமீது
படர்கொடி நீங்கள்தானம்மா இராஜேஸ்வரி யம்மா!

அறிவிப்பில் பதம்பெற்ற அன்னைத்தமிழம்மா
அழியாது அழியாது அகிலமீ தழியாது உந்தன்பேர்
நிறைந்தே நல்லன பெறுக அம்மை – நான்
நற்றமிழில் வழுத்தினேன் குயிலின்குரலை!

நன்றி

குறிப்பு-
இலங்கை வானொலியின் புகழ்பெற்ற அறிவிப்பாளர் காலஞ்சென்ற இராஜேஸ்வரி சண்முகத்தின் ஞாபக விழா இன்று ஞாயிற்றுக்கிழமை (13..05.12) கொழும்பு வெள்ளவத்தை தமிழ் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு இடம்பெற்றது.

தடாகம் கலை இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் பிரதம நிறைவேற்று அலுவலர் சாந்தி சச்சிதானந்தம் தலைமை வகித்தார்.

பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் , கல்முனை மாநர சபை முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் , புரவலர் காசிம் உமர் , கவிஞர் ஜின்னாஹ் சரிபுதீன், கவிஞர் மேமன் கவி ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பதிதிகளாக கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கல்முனை மாநர சபை முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப், கலாநிதி துரை மனோகரன், கலைமகள் ஹிதாயா ரிஸ்வி , அறிவிப்பாளர் புர்கான் பி இப்திகார் , இராஜேஸ்வரி சண்முகத்தின் மகன் அறிவிப்பாளர் சந்திரகாந்தன் சண்முகம் , கவிஞர் மேமன் கவி, எழுத்தாளர் சுல்பிகா சரீப் ஆகியோர் உரை நிகழ்த்தினர்

கானக் குயிலுக்கு கவிதை குரல்கள் என்ற மகுடத்தில் கவியரங்கம் இடம் பெற்றது. தமிழ் தென்றல் அலி அக்பர் தலைமையில் நடைபெற்ற கவியரங்கில் கவிஞர்களான நஜ்முல் ஹுசைன், பதியத்தளாவ பாரூக் , கலாநெஞ்சன் ஷாஜஹான், வெலிமடை மகாலிங்கம் , கிண்ணியா அமீரலி , கலைமகன் பைரூஸ் , சுகைதா ஏ கரீம் ,ஸைலஜா, கலையழகி வரதராணி ஆகியோர் கலந்து கொண்டனர்.


மற்றும் கௌரவிப்பு நிகழ்வு என்பனவும் அங்கு இடம்பெற்றன.
SMS:------------------------------------------- +94 0777292292
Thanks,For your wonderful performance at raji's Kaviarangu. Pls. Forward your Kavithai' to my email - xxxxxxxxxxxxxxx - Ali Akbar. 05/17/2012 14:01

FACEBOOK---------------------------------------- Kalaimahal Hidaya
தம்பி கலைமகன் பேச முடியாத நிலைமையில் (தொண்டைவலியால் )உடன் வந்து விட்டேன் இன்ஷா அல்லாஹ் இரு நாளில் கொழும்பு போகின்றேன் கண்டிப்பாக உங்கள் படங்களை எடுத்து அனுப்பி வைப்பேன் என் அழைப்பை மதித்து வந்தமைக்கு சந்தோசம். உங்கள் கவிதை பிரமாதம் நன்றிகள் ..!..

வியாழன், 10 மே, 2012

வானொலிக்குயில் இராஜேஸ்வரி சண்முகத்தின் ஞாபக விழா

இலங்கை வானொலியின் புகழ்பெற்ற அறிவிப்பாளர் காலஞ்சென்ற இராஜேஸ்வரி சண்முகத்தின் ஞாபக விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (13..05.12) கொழும்பு வெள்ளவத்தை தமிழ் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு இடம்பெறவுள்ளது . விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் பிரதம நிறைவேற்று அலுவலர் சாந்தி சச்சிதானந்த்ததின் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் ரிசாட் பதியுதீன் கலந்து சிறப்பிக்கவுள்ளார். அத்துடன் கல்முனை மானநர சபை முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப், மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவகீர்த்தா பிரபாகரன், இலங்கையின் முதலாவது பெண் நீதிபதி ஏ.எல்.நூறுஸ் மைமுனா, முன்னாள் பிரதி அமைச்சா ;சட்டத்தரணி எஸ்.நிஜாமுதீன், புரவலர் ஹாசிம் உமர் , அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் வை.எஸ்.எம்.ஹமீட், கவிஞர் ஜின்னாஹ் சரிபுதீன், முஹமட் மர்ஸூக், பிரபல அறிவிப்பாளர் அஷ்ரப் சிஹாப்தீன் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பதிதிகளாக கலந்து கொள்ளவுள்ளனர். தடாகம் கலை இலக்கிய வட்டத்தின்ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில்கவியரங்கம் மற்றும் கௌரவிப்பு நிகழ்வு என்பனவும் இடம்பெறவுள்ளன.

சனி, 5 மே, 2012


Thanks : VTV Producer Poet Asmin, Ass. Producer Poet Mawanella Rishan Sheriff, Announcer, Radio Artist, TV Artist Poet Nagapooshani Karuppayya. SPECIAL THANKS : Vasantham TV -Kalaimahan Fairooz