It கலைமகன் கவிதைகள்: அக்டோபர் 2012

செவ்வாய், 30 அக்டோபர், 2012

காரணத்த சொல்லியழு!

காரணத்த சொல்லியழு!
---------------------------------

ஆராரோ... ஆராரோ...
யார நெனச்சி நீயழுறாய்
காரணத்த சொல்லியழு!
கண்ணே காரணத்த சொல்லியழு!

பெண்ணாக பொறந்ததுதான்
பெருந்தப்பு என்றேதான் அழுறாயா?
பெரிதானால் பெரும் கவல
என்றுதான் அழுறாயா
கண்ணே....
காரணத்த சொல்லியழு!

அழகெல்லாம் ஒன்றாய்க்குவித்து
ஆண்டவன் படச்சான் எண்டாலும்
குற்றுயிர்தான் காசு இல்லையெண்டாக்கா
என்றுதான் அழுறாயா
நான் பெத்த கனிச்சுழையே
காரணத்த சொல்லியழு!

சீர்வரிச இல்லாட்டா
சீதனம் பெரிசா இல்லாட்டா
பெத்தவங்க நாங்க துன்பப்படனும்எண்டா
இப்படி அழுறீங்க...
கட்டிக்கரும்பே என் சர்க்கரையே
காரணத்த சொல்லியழு!

நல்லறிவு பெற்றாலும்
நல்ல குணம் அமஞ்சாலும்
நல்ல சாதி இல்லாட்டா
ஏறெடுத்தும் பாக்கமாட்டாங்க
என்றுதான் அழுறாயா?
நான் பெத்த பவளமே
காரணத்த சொல்லியழு!

பெண்ணாக பொறந்ததால
சிந்திக்க விடமாட்டாங்க
பாதயெங்கும் காமுகர்கூட்டமுங்க
என்றேதான் அழுறாயா
என் உசிருக்கு உசிரானவளே
காரணத்த சொல்லியழு!
ஆராரோ.... ஆராரோ....

முதுகெலும்பில்லாம
காசுபணம் கேட்டுவீட்டுக்கனுப்புவாங்க
வரவுள்ள மாப்பிளயெண்டுநீங்க
அழுறீங்களா என் கண்ணே!
அழாதீங்க... அழாதீங்க....
நல்ல மாப்பிள்ளையளும்
உண்டு கண்ணா அழாதீங்க...
காரணத்த சொல்லியழுங்க....
காரணத்த சொல்லியழுங்க....

மாமறையில் சொல்வதுபோல்
நல்லமாதிரி நான் வளப்பன்
நல்லறிவும் நான் தருவன்
அடுத்தான் சோத்த திண்டுவாழும்
மாப்பிள்ள நான் பேசித்தரமாட்டன்
அழாதிங்க என் உசிரே...
அழாதீங்க என் உசிரே....
ஆராரோ.... ஆரிவரோ
யாரநெனச்சி நீயழுறாய்
காரணத்த சொல்லியழு!
காரணத்த சொல்லியழு!!

-கலைமகன் பைரூஸ்
2012.10.30 9:54


நன்றி : இலண்டன் வானொலி வியாழன் கவிதை நேரம் 2012/11/01

கருத்துரைகள்:
ஒரு பெண் எதிர்காலத்தில் அனுபவிக்கப் போகும் அவலங்களையெல்லாம் வரிசையாய் பட்டியலிட்டு பாடிவிட்டீர்கள்.....இனியாவது அந்தக் குழந்தை நிம்மதியாய் துயிலட்டும்.
31/10/2012 

நாட்டார் பாடல் பண்பில் இன்னொரு வரவு
31/10/2012 

Arumayana varikal sakothara.
Nallathoru thaladdu....arumai
01/11/2012 

நன்றாக உள்ளது.......வாழ்த்துக்கள்
01/11/2012 

நல்ல கற்பனை வளம்.சிறந்த பேச்சு நடை
02/11/2012




 

ஞாயிறு, 28 அக்டோபர், 2012

வேண்டாத சாதி வேண்டாமடா!


குட்டைகளைக் கிழப்ப கட்டையர்கள்
குழப்பிவிட்டதுதான் சாதி! - அதில்நீ

மட்டியாயின் அழிந்தொழிந்தாய்
மடைமையில் மூழ்குவதே மீதி!

சாகிப் என்றும் மரைக்காயர் என்றும்
சாதிகள் சிறப்பாய்ப் பேசி - அதில்நீ
சாகியம் ராவுத்தார் என்றும்கூறி
சந்திகள் பிரிவதுபோல் பிரிவதே மீதி!

வயிற்றை வளர்த்திட செய்திட்ட ரன்று
வக்கிரமங்கள் செய்து! - அதில்நம்
மயிர்பிடுங்கி துப்பும் துலங்கச் செய்து
மடைமையில் ஆழ்ந்திட்டோம் விதி!

உனக்குள் ஆயிரம் பேர்கள் சூடிடு
உத்தமன் நீயெனக் கூறு - அதில்
ஈனச்செயலன்ன சாதியம் நீபேசி
இந்நிலத்தே போடாதே கூறு!

தெய்வத்தை நம்புவதாய்க்கூறு
தெய்வம் கோபமுறும் செயலும் செய்து
பொய்யான சாதியம் பேசிடின் உம்மை
பெருநரகே சூழ்ந்திடும் பொய்யாயின் பாரு!

நல்லவன் நானெனக் காட்டுகிறாய்
நானிலத்தை ஏமாற்றுகிறாய் - நீ
பொல்லாத சாதியம் பேசி
பைய பையவே செல்வாய் சுவர்க்கம்நீ!

மண்மீது நீ நல்லவனாயின் இன்றே
சாதிநிலை மறந்திடுவாய் - எல்லோரும்
கண்போன்றோர் என்றெண்ணி சார்ந்திடுவாய்
கலங்குவாய் நீயாயின் பாவம் நீயே!

சாதியெலாம் சாமியர்பலர் வார்த்தமை
சந்தியெலாம் பேருயர உண்டிசேர்க்க
நாதியிலா அவர்கள் வார்த்த மை
நம்புவாய் நீயாயின் பாவம் நீயே!

குருடான கண்களெலாம் ஒளிபாய்ச்சி
குவலயத்தை கைக்குள்ளே பத்திரமாய்
நேர்கொண்ட பார்வையினால் பார்த்தின்று
நல்லன தெளிவது அறியாயோ பேதைநீ?

சாகியம் பேசிடாதே மானிடாநீ
சந்தர்ப்பம் இலையென பயந்திடாதே
வேகாது இன்று சாதித்துவம் பேசின்
வெண்மனதை நீகொள்ளு - நிலமும் மகிழும்!
- -கலைமகன் பைரூஸ்

கருத்துரைகள்
குறிஞ்சி மகள் அருமை தோழரே.. மிக அருமை.
குட்டைகளைக் கிழப்ப கட்டையர்கள்

'கிழப்பி விட்டதுதான் சாதி - அதில் நீ
மட்டியாயின் அழிந்தொழிந்தாய்
மடமையில் மூழ்குவதே மீதி....'
அருமை நண்பா. 
 

2012. 10. 28 

Safran Mohamed prominent message for society,,,but the question is that how many can understand your lyrics? 2012/11/11

மக்கள் நண்பன் அருமை சேர்....சாதி பற்றி அழகாக எழுதி உள்ளீர்கள்். 2012/11/13

வெள்ளி, 26 அக்டோபர், 2012

ஏ.ஆர்.எம். ஹுஸைன் - இரங்கற்பா

சென்ற 2012. 10. 14 ஞாயிற்றுக் கிழமை வெலிகாமம் அறபா தேசிய பாடசாலை வெபா மண்டபத்தில், மறைந்த முன்னாள் கல்விப்பணிப்பாளரும் கல்விமானுமான மர்ஹூம் அல்ஹாஜ் ஏ.ஆர்.எம். ஹுஸைன் அவர்கட்கான இரங்கற்கூட்டமும், பன்னூலாசிரியர் கலாபூசணம் ஹபீபுர் ரஹ்மான அவர்களால் தொகுக்கப்பட்ட நெஞ்சை விட்டும் நீங்காத நினைவலைகள் மர்ஹூம் ஏ.ஆர்.எம். ஹுஸைன் நினைமலர் வெளியீடும் நடைபெற்றது.

முன்னாள் அறபா கனிட்ட வித்தியாலயத்தின் அதிபராகவிருந்த அல்ஹாஜ் ஏ.ஆர்.எம். இர்சாத் தலைமையில் நடைபெற்ற விழாவின் சிறப்பதிதியாக புரவலர் புத்தகப் பூங்கா நிறுவுனரும், இலக்கிய நெஞ்சங்களுக்குக் கரங்கொடுக்கும் புரவலருமான அல்ஹாஜ் ஹாஷிம் உமர் கலந்துகொண்டார்.

சிறப்புப் பேச்சாளராக அறபா தேசிய பாடசாலை ஆசிரியர் அஷ்ஷெய்க் முன்திர் (நளீமி) கலந்துகொண்ட இவ்வைபவத்தில் கலாநிதி எஸ். தணிகாசலம், கல்விப் பணிப்பாளர்களான எம்.ரீ.எம். ஆகில், மதனியா கலீல் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கலாபூசணம் ஏ.எச்.எம். யூசுப் நூலாய்வும், கலைமகன் பைரூஸ் இரங்கற்பாவும், இஸ்லாமியக் கீதப்பாடல்கள் புகழ் செல்வன் மின்ஸார் இரங்கற்பாடல்களும் பாடினர்.

நிகழ்ச்சிகள் யாவும் ஊடகவியலாளர் சகோதரர் எம். மிப்ராஹ் அவர்களால் சிறப்பாக நெறியாள்கை செய்யப்பட்டிருந்தன.



இவ்வைபவத்தில் என்னால் பாடப்பட்ட இரங்கற்பா!

விண்ணைப் படைத்து மண்ணைப் படைத்து
வீறுடை மனிதனையும் பேறாய்ப் படைத்து
கண்ணெனக் காக்கும் இறையைப் போற்றி
கருத்தினின் நிறைந்த ஆசான்க்காய் பாடுகிறேன் பா!

அன்பின் உறைவிடமாய் வாழ்ந்தவர்
அன்பிலாதாரை அணைப்புக்குள் கொணர்ந்தவர்
சொன்னயம்மிக்க பேச்சுடனே வாழ்ந்தவர்
சொல்லவியலாத் தகைமைகள் பல பூண்டவர்!

ஏ! ஆர் இந்த ஹுஸைன் என்பார்க்கு
ஏற்றம்காண் ஏயாரெம் ஹுஸைன் ஸேர் என்பேன்நான்!
நோவாமல் மனம் இனியன இயற்றினார் - ஈற்றில்
நாயனின் அருள்பெறவே தனியாய் நின்றார்!

மண்ணூர்க்கு மாண்புசேர்த்த வல்லாளர்
மண்மீது மடைமை களையவந்த பேராளர்
கண்மீது நிறைந்தே நிற்கும் நம்மவர்
கருத்திற்கினிய ஹுஸைன் ஸேரைப் பாடுவேன்!

நம்மறபாவின் சீரிய மாணாக்கனாய் நின்றவர்
நம்மறபா பேருயற பல்கலையது சென்றவர்
எ(ம்)மையெலாம் அன்பாகத் தட்டித் தந்தவர்
ஏயாரெம் ஹுஸைன் ஸேரை ஏத்திப் புகழ்வேன்!

தேசமெங்கும் வல்லவர்கள் பலருண்டு - இதில்
தணியாத தாகத்தால் வளர்ந்தவர்கள் சிலருண்டு
வேசமிலா நல்லுளத்தார் ஹுஸைன் ஸேரை நினைத்திடவே
வேகுது உள்மனது இதுதானே உண்மை!

மண்ணுக்கு மாண்புசேர்த்த விழாவன்று
மரகதமாய் உரைத்திட்ட அவரது சீரியபேச்சு
எண்ணுந்தோறும் ஆற்றலைத்தான் வியக்குது
எழுத்தெண்ணிப் படித்திடின் சுடுமே!

மெய்சொல்ல மயங்காத மண்ணின் மைந்தனே!
மணமான உளங்கொள் மரகதமன்ன நல்லவரே!
செய்திட்ட நூலின்று அணியாய்ச்சொலும் உமை
சீர்பெற்று நற்சுவர்க்கத்து சுகந்தம்பெறவே துஆவிரந்தேன்!

பல்லோரும் நல்லவர் நம் ஹுஸைன்ஸேரென்று பேசுகிறார்
பார்மீது உம்பெயர் நீளும் - உண்மை தெரிந்தோம்!
நல்லோர்கள் நினைத்துருகும் உமைக்காணாதே இன்று
நோகுது உம்மறைவையெண்ணி! நிதம்... நிதம்!!

-கலைமகன் பைரூஸ்
14-10-2012 8:35
http://youtu.be/Sul91LsxSEI