It கலைமகன் கவிதைகள்: சாதி சாதித்ததென்ன சோதி!

சனி, 26 மார்ச், 2016

சாதி சாதித்ததென்ன சோதி!

சாதி சாதியென்றே சிறுமைத்தனத்து
சங்கடந்தான் பிறர்க்கீயும் சாதிபேசி
நீதவான் நாங்கள் தானெனப்பேசும்
நீதமற்றாரின் பண்பை ஏதென்பேன்!

உயர்சாதி நாமென்று பிறரைத்தான்
உயர்விலா இழிசாதி என்றுரைத்து
பெயர் புதியன அவர்க்கியற்றி
பெருமை பெற நினைப்பவரீனர்!

இறையைப் பணியுமிடமும் இதமான
இத்தரையும் நமக்கே சொந்தமென்று
மறைவாக கள்ளுண்டும் உள்தீயொடு
மற்றவரைத் தீண்டு மிவர் உயர்சாதியாம்!

சாதிகளிற் பல சாதிகள் சேர்த்து
சாதியுயர்வு எம்சாதிக்கென்றே ஓதி
நீதியான மானுடனை நல்லவனை
நிம்மதி யிழக்கச்செயு மிவனென் சாதி?

தம்முண்டி வளர்வதற்காய் பிறரைவைது
தம்மாளம் தப்புத்தப்பாய் பறையடித்து
இம்மண்ணின் வாழும் மானுடனின்
இன்பந்தான் கெடுக்கும் இவனென் சாதி?

தலித் என்ற பெயர் வைத்ததெங்ஙனம்நீ?
தரணியினின் நாற்சாதி உருவாக்கியதேன்?
கலியேதான் கண்கெட்ட செயலாற்றத்தான்
சாதிதான் சாதித்ததென்ன உன்னில்சோதி?

-கலைமகன் பைரூஸ்
26.03.2016

கருத்துரை
------------------
Baskaran Ranganathan (Chennai) 
புறத்தே வெளுத்து அகத்தே கருத்த மாந்தர் இவர் இழிசெயல்
துரட்டி ஓட்ட வேண்டும் வீதியில் இருக்க வொட்டாமல்
இவறன்றே இழிந்த சாதி மறைவாய் தலீத்துப் பெண்ணையும்
கலந்தே பின் தலை முழுக்காடி புனிதம் தேடுவர் தீயோர்
இவர் குறித்தே இதயம் தைக்கும் வண்ணம் நன்றாய் 
கடிந்தனை தீயோர் தீயிலிடப் படவே விரைவில்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக