அது கண்ணீரா, அல்லது நம்பிக்கையா?
குழந்தையின் சிரிப்பு மங்கியதேன்?
காற்றே, நீயும் சொல்லாமல் போனாயே…!
சிதைந்த வீடுகளின் இடுக்குகளில்,
சின்னஞ்சிறு கனவுகள் புதைந்திருக்கின்றன;
அவற்றைத் தூக்கி நிறுத்த
ஒரு விடியற்காலம் காத்திருக்கிறது…
பயத்தோடு விழிக்கும் ஒவ்வொரு காலையும்,
அமைதிக்காக பிரார்த்திக்கும் இதயங்கள்;
“நாளை நமதே” என்று சொல்ல
இன்னும் துணிவையே தேடுகின்றன…
எல்லைகள் சிதைந்தாலும் மனிதம் பிரியாதே,
வானம் எல்லோருக்கும் ஒன்றல்லவா?
சூரியன் உதிக்கும் போது அது கேட்குமா...
“நீ யாரின் நிலம்?” என்று?
நிலம் சொல்கிறது:
“என்னைப் பகிர்ந்துகொள்,
ஆனால் காயப்படுத்தாதே…”
மக்கள் சொல்கிறார்கள்:
“எங்களுக்கு உயிரோடு வாழ
ஓர் இடம் போதும்…”
ஒருநாள் வரும் -
கண்ணீர் காற்றில் கரைந்து போகும் நாள்;
சிரிப்புகள் மீண்டும் முளைக்கும் நாள்;
அமைதி மனிதத்தின் மொழியாகும் நாள்…
அந்த நாளுக்காக
ஒரு உலகம் காத்திருக்கிறது…
- கலைமகன் பைரூஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக