மத நிந்தனையும் சமூக ஊடகச் சீரழிவும்: எல்லையைக் கடக்கும் வெறுப்புப் பேச்சுக்கள்
இன்றைய இணைய உலகில், மனித உறவுகளை இணைக்கும் பாலமாகச் செயல்பட வேண்டிய சமூக வலைத்தளங்கள், துரதிர்ஷ்டவசமாகச் சில நேரங்களில் வெறுப்பையும் கசப்புணர்வையும் விதைக்கும் நிலங்களாக மாறி வருகின்றன. குறிப்பாக, சமூக வலைத்தளங்களில் சில குறிப்பிட்ட
மதங்களைச் சேர்ந்த ஒரு சிலர், பிற மதக் கோட்பாடுகளை விமர்சிப்பதையும், எல்லை கடந்து தூற்றுவதையும் (தூஷிப்பதையும்) அன்றாட வழக்கமாகக் கொண்டிருப்பதை நாம் வேதனையுடன் அவதானிக்க முடிகிறது.சட்டத்தின் கடுமையான கரங்களும், பாடங்களும்
மத நம்பிக்கைகள் என்பவை தனிமனிதனின் மன உணர்வுகளோடும், அவனது அடையாளத்தோடும் ஆழமாகப் பின்னப்பட்டவை. இதைக் கருத்தில் கொண்டு, உலகின் பல நாடுகள் மத உணர்வுகளைத் தேவையற்ற முறையிலும், வன்மத்தோடும் விமர்சிப்பவர்களுக்கு எதிரான சட்டங்களை மிகக் கடுமையாக்கியுள்ளன. பிற மதங்களை இழிவுபடுத்துவோருக்கு வழங்கப்படும் தண்டனைகள் மிக உச்சக்கட்டமாக இருக்கின்றன.
அண்மையில் இடம்பெற்ற ஒரு சம்பவத்தில், எல்லைமீறி பிற மதத்தை விமர்சித்த இளைஞன் ஒருவனுக்குச் நீதிமன்றம் அதிஉயர் தண்டனையை வழங்கியதை நாம் அனைவரும் பார்த்தோம். ஒரு கண நேர ஆத்திரமும், கவன ஈர்ப்பு ஆசையும் ஒரு இளைஞனின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கிவிட்டது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு தகுந்த எச்சரிக்கை.
அடங்காத விசமிகளும், முகநூல் விதிகளும்
இவ்வளவு கடுமையான சட்டங்களும், கண்முன்னே நடக்கும் தண்டனைகளும் எச்சரித்த பின்னரும்கூட, சமூக வலைத்தளங்களில் உலா வரும் சில விசமிகளின் வண்டவாளம் அடங்கியபாடில்லை. பெயரற்ற கணக்குகள் (Fake IDs) மூலமாகவும், மறைமுகப் பதிவுகள் மூலமாகவும் தொடர்ந்து பிற மதங்களை இழிவுபடுத்தும் நாசகார வேலையைச் சிலர் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.
முகநூல் (Facebook) போன்ற சமூக ஊடகத் தளங்கள் தெளிவான சமூக வழிகாட்டுதல்களையும், சட்டதிட்டங்களையும் (Community Standards) கொண்டுள்ளன. வெறுப்புப் பேச்சுக்களைப் பரப்புவதும், பிற மத நம்பிக்கைகளைப் புண்படுத்துவதும் இந்த விதிகளுக்கு முற்றிலும் எதிரானவை. இவ்வாறான செயல்கள் தனிநபர் கணக்குகள் முடக்கப்படுவதற்கும், சட்டரீதியான நடவடிக்கைகளுக்கும் வழிவகுக்கும் என்பதை உணர்வது அவசியம்.
வாழும் உரிமை அனைவருக்கும் உண்டு; வழிபடும் சுதந்திரம் அவரவர் விருப்பம்.
மனசாட்சிக்கான அழைப்பு
அவரவர் மதங்களைப் பின்பற்றுவதும், அதன் வழியில் நடப்பதும் ஒவ்வொரு தனிமனிதனின் அடிப்படை விருப்பமும் உரிமையுமாகும். "என் மதம் உயர்ந்தது" என்று காட்டுவதற்குப் "பிற மதம் தாழ்ந்தது" என்று நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. எந்தவொரு மதமும் பிற மதங்களை இழிவுபடுத்தக் கற்றுக்கொடுக்கவில்லை.
பிற மதங்களை விமர்சிப்பதையும், தூற்றுவதையும் இதோடு நிறுத்துவோம்! சமூக வலைத்தளங்களை வெறுப்பைப் பரப்பும் மேடையாக மாற்றாமல், புரிதலையும் சகிப்புத்தன்மையையும் வளர்க்கும் களமாக மாற்றுவோம். சட்டத்திற்கும், சமூக அமைதிக்கும் ஊறு விளைவிக்கும் இத்தகைய செயல்களில் இருந்து விலகி, மனிதநேயத்தைப் போற்றுவோம்.
- Kalaimahan Fairooz
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக