It கலைமகன் கவிதைகள்: ஏப்ரல் 2020

செவ்வாய், 7 ஏப்ரல், 2020

தெல்தோட்டை நஸீரா ஸலீமின் கவிதைகள் இரண்டு

வாடும் நிலாவே!-----------------------------
இருமைத் துலங்கிச் சுழலும்
பிரபஞ்ச வெளியில்
துளாவிக் கதிர் பரப்பிய
பரிதியின் பிரதியாய்
பூரணை நிலவு !

பகலவன் பிரிவால் படர்ந்த
இராக் காதலியின்
கவலை ரேகைகளை
ஆற்றுப்படுத்தவே
இரவலை முறுவலாக்கிப்
பிரகாசிக்கும்
செவிலி அவள் !


மதியின் விதி உணரா
விண்மீன் தோழிகள்
வான் தலைவியை சூழ்ந்தே
தன் எழில் சிந்தி
கண் சிமிட்டி
நிலவைப் பழிக்கும் !

எத்தனை குத்தல் கதைகளை
கேட்டேனடி வான்மகளேயென
வாட்டத்தில் வதங்கியே
உடலிளைத்து
மனம் உடைந்து
குளிர் நிலவும்
ஒரு நாள் போர்த்தியுறங்கும் !!
நியாயம் கேட்க வகையின்றி
ஒற்றையாய் நேசித்தது சொல்லா
இராக்கடலும்
உள்ளுக்குள் குமுறும்
அமாவாசையில்
அந்த மதியைப்போலவே...

- நஷீரா பின்த் ஹஸன் (2020.04.07)

---------------- 2 ----------------

நானும் உங்களில் ஒருவன்-----------------------------------------------
தலைநகரின் தலைசிறப்பிற்காய்
தலை எழுத்தை விலைபேசி
அலைகழிக்கப்பட்ட
மலையக உழைப்பாளிகள் நாம்!

காய்ந்த ரொட்டித்துண்டிலும்
கசட்டைக் கோப்பையிலும்
காலம் கழிவதை
காலங்காலமாய் சகிப்பதா
சுகிப்பதாவென
மூட்டை மூட்டையாய் கனவு சுமந்து
கொழும்பு வந்தோமன்றி
கொழுப்பெடுத்து வரவில்லை.