It கலைமகன் கவிதைகள்: மாற்றம் வேண்டும்!

செவ்வாய், 2 நவம்பர், 2010

மாற்றம் வேண்டும்!

பணத்தாலும் பதவியாலும் தத்தம் பெருமை
பேசிவரும் ஈனரிங்கு சாய வேண்டும்
பிணமென நிற்பார் எழ வேண்டும்
பள்ளத்தில் வீழ்ந்தார் மீள வேண்டும்

குணத்தொடு நிற்பார் வந்துபார்த் திரங்க
குனிந்த மாந்தரி லொளி வேண்டும்
பணத்தாலே எல்லாம்ஆம் எனும்நிலை மாற
பண்பட்ட தூயோரிங் குதித்தல் வேண்டும்

தண்மதி தந்திடும் தண்ணளிபோ லிங்கு
தரமிகும் மானுடரால் வேண்டும் களிப்பு
கண்ணொடு புண்கொள் கருத்தும் விலகிட
கயமை மடிந் தொழிய வேண்டும்

தண்டலை யெங்கனும் நலமிக வோங்கி
தரணி யுயர்ந்திட வேண்டும் இம்
மண்டல மெங்கனும் சாதி யொழிந்து
மாண்புறு மனிதம் வளர வேண்டும்

வீண்பேச்சு பேசிப்பேசி சமர் ஓட்டும்
வீண ரிங்கு மடிய வேண்டும்
எஞ்ஞான்றும் வழக்குப்பேசி நாளோட்டும் தீய
எத்தர்கள் ஆறறிவொடு மீள வேண்டும்!


-கலைமகன் பைரூஸ்
இலங்கை.

நன்றி
*  முத்துக்கமலம்
*  காற்றுவெளி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக