It கலைமகன் கவிதைகள்: வாக்கு வேட்டைக்காரர்

ஞாயிறு, 2 அக்டோபர், 2011

வாக்கு வேட்டைக்காரர்

- ஜின்னாஹ் ஷரிபுத்தீன் -


வழமைபோல் தேர்தல் வரவு கொண்டோம் நாடே
இளமைகொண்ட தாமோ எனுமாப்போல்- துள்ளியெழும்
உற்சாக மேலீட்டால் ஓடுகின்றார் வீடுவீடாய்
பெற்றிடத்தான் வாக்குகளைப் பார்

தேர்தல் களத்தில் தகுதியற்றோர் போட்டியிட்டால்
சார்ந்துநீர் வாக்களித்தல் சாலதே- நேர்மையொடு
நாட்டுக் குழைக்கின்ற நல்லவர்க்கே கைதருவீர்
“ஓட்டின்” பலமறிக ஓர்ந்து

வாக்களிப்பார் எல்லா வகையும் நாம் செய்வோமென்பார்
சோக்காய்க் கதையளப்பார் சொல்லும்பொய்- காக்கும்
திறனற்றோர் நாற்காலி தன்பாலே தேடும்
குறியன்றி வேறொன் றிலை

தந்தையென்பார் தாயென்பார் தம்பி தமக்கையென்பார்
சொந்தம் நீர் செங்குருதிச் சார்பென்பார்- விந்தையிலை
தேர்தல் முடிந்தபின்னர் தேராரே சென்றால் நீ
யாரப்பா என்பார் இகழ்ந்து

ஊருக் குழைக்கின்ற உத்தமர்கள் உண்டாம்பொய்ப்
பேருக்குப் பொன்வீசும் பேருமுண்டு- சீரற்றுப்
போனதின்று முற்றும் தெரிந்து முகம் கொள்வீர்
ஞானருக்கே வாக்களிப்போம் நாம்

1 கருத்து: