It கலைமகன் கவிதைகள்: காரணத்த சொல்லியழு!

செவ்வாய், 30 அக்டோபர், 2012

காரணத்த சொல்லியழு!

காரணத்த சொல்லியழு!
---------------------------------

ஆராரோ... ஆராரோ...
யார நெனச்சி நீயழுறாய்
காரணத்த சொல்லியழு!
கண்ணே காரணத்த சொல்லியழு!

பெண்ணாக பொறந்ததுதான்
பெருந்தப்பு என்றேதான் அழுறாயா?
பெரிதானால் பெரும் கவல
என்றுதான் அழுறாயா
கண்ணே....
காரணத்த சொல்லியழு!

அழகெல்லாம் ஒன்றாய்க்குவித்து
ஆண்டவன் படச்சான் எண்டாலும்
குற்றுயிர்தான் காசு இல்லையெண்டாக்கா
என்றுதான் அழுறாயா
நான் பெத்த கனிச்சுழையே
காரணத்த சொல்லியழு!

சீர்வரிச இல்லாட்டா
சீதனம் பெரிசா இல்லாட்டா
பெத்தவங்க நாங்க துன்பப்படனும்எண்டா
இப்படி அழுறீங்க...
கட்டிக்கரும்பே என் சர்க்கரையே
காரணத்த சொல்லியழு!

நல்லறிவு பெற்றாலும்
நல்ல குணம் அமஞ்சாலும்
நல்ல சாதி இல்லாட்டா
ஏறெடுத்தும் பாக்கமாட்டாங்க
என்றுதான் அழுறாயா?
நான் பெத்த பவளமே
காரணத்த சொல்லியழு!

பெண்ணாக பொறந்ததால
சிந்திக்க விடமாட்டாங்க
பாதயெங்கும் காமுகர்கூட்டமுங்க
என்றேதான் அழுறாயா
என் உசிருக்கு உசிரானவளே
காரணத்த சொல்லியழு!
ஆராரோ.... ஆராரோ....

முதுகெலும்பில்லாம
காசுபணம் கேட்டுவீட்டுக்கனுப்புவாங்க
வரவுள்ள மாப்பிளயெண்டுநீங்க
அழுறீங்களா என் கண்ணே!
அழாதீங்க... அழாதீங்க....
நல்ல மாப்பிள்ளையளும்
உண்டு கண்ணா அழாதீங்க...
காரணத்த சொல்லியழுங்க....
காரணத்த சொல்லியழுங்க....

மாமறையில் சொல்வதுபோல்
நல்லமாதிரி நான் வளப்பன்
நல்லறிவும் நான் தருவன்
அடுத்தான் சோத்த திண்டுவாழும்
மாப்பிள்ள நான் பேசித்தரமாட்டன்
அழாதிங்க என் உசிரே...
அழாதீங்க என் உசிரே....
ஆராரோ.... ஆரிவரோ
யாரநெனச்சி நீயழுறாய்
காரணத்த சொல்லியழு!
காரணத்த சொல்லியழு!!

-கலைமகன் பைரூஸ்
2012.10.30 9:54


நன்றி : இலண்டன் வானொலி வியாழன் கவிதை நேரம் 2012/11/01

கருத்துரைகள்:
ஒரு பெண் எதிர்காலத்தில் அனுபவிக்கப் போகும் அவலங்களையெல்லாம் வரிசையாய் பட்டியலிட்டு பாடிவிட்டீர்கள்.....இனியாவது அந்தக் குழந்தை நிம்மதியாய் துயிலட்டும்.
31/10/2012 

நாட்டார் பாடல் பண்பில் இன்னொரு வரவு
31/10/2012 

Arumayana varikal sakothara.
Nallathoru thaladdu....arumai
01/11/2012 

நன்றாக உள்ளது.......வாழ்த்துக்கள்
01/11/2012 

நல்ல கற்பனை வளம்.சிறந்த பேச்சு நடை
02/11/2012




 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக