It கலைமகன் கவிதைகள்: 'கவித்தீபம்' பட்டத்துடன் காரணகர்த்தாக்களை நினைத்துப் பார்க்கிறேன்...!

திங்கள், 10 ஜூன், 2013

'கவித்தீபம்' பட்டத்துடன் காரணகர்த்தாக்களை நினைத்துப் பார்க்கிறேன்...!

தடாகம் கலை இலக்கிய வட்டம் சர்வதேச ரீதியில் நடாத்திய 'திறந்த (2013 மே மாதக்) கவிதைப் போட்டியில், எனது கவிதை (காசேதான் பேறாமோ?) சிறப்புக் கவிதையாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

சிறந்த கவிதைக்காக தடாகம் வழங்கும் 'கவித்தீபம்' பட்டமும் கௌரவமும் எனக்கு வழங்கப்பட்டுள்ளது. (இது எனது வாழ்வில் கிடைத்த முதல் பட்டம் என்பதால் பெருமகிழ்வு எனக்கு.)

கவிஞர்களையும், கவிதைகளையும் புடம்போட்டு,
அவர்களுக்கு மரியாதை வழங்கும் தடாகம் கலை இலக்கிய வட்டக் குழுவினரை, கவிதைத் தேர்வுக் குழுவினரை நான் பெருமையோடு இவ்விடத்தில் நினைத்துப் பார்க்கிறேன்.

மேலும், எனது வெற்றிகள் பற்றி என்றும் வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் ஊடகங்களையும், ஊடகவியலாளர்களையும் நினைவுபடுத்திக் கொள்கிறேன்...

எழுத்தில் நான் கால்பதிக்க முழு முதற்காரணமான அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்.

1985 ஆம் ஆண்டு எனது பால்ய வயதில், நான் 'தினகரன்' சிறுவர் உலகத்திற்கு அனுப்பிய 'ஐம்பது சத நாணயம்' சிறு கட்டுரையை பிரசுரித்து எனக்கு ஊக்கமும் உற்சாகமும் ஊட்டிய 'தினகரன்' ஆனந்தியை என்றும் மறவேன். அன்று தினகரனில் எனது ஆக்கம் களம் காணாதிருந்திருந்தால் நான் எழுத்தின்பால் சென்றிருப்பேனா? எனக்குள் கேள்வி எழுகிறது.

என் எழுத்துக்களை என்றும் ஏற்றிப் போற்றிய என் தமிழாசான் அமரர் வித்துவான் எம்.ஏ. ரஹ்மான், என்றும் என்னைப் புடம்போட்ட தென்னகத்தின் பிரபல கவிஞர், பன்னூலாசிரியர், சகலகலா வித்தகர் எம்.எச்.எம். ஷம்ஸ், என்னை என்றும் தட்டித்தந்த - எனக்குள் ஏணியாய் நின்ற - நிற்கும் எழுத்தாளரும் பன்னூலாசிரியருமான திக்குவல்லை ஸப்வான், என் வாழ்வில் ஒளிவீசப்பெறும்காலை மனமகிழும் நல்லுள்ளங்கள், எனது ஆக்கங்களை தவறாமல் கற்று, ஆக்கங்களைப் பாதுகாத்துவரும் என் மாணாக்கர், மற்றும் முகநூலில் நட்புபாராட்டி என் ஆக்கங்களை காழ்ப்புணர்வின்றி விமர்சிக்கும் உளங்களுக்கும்,

நான் ஆக்கங்கள் எழுதும்போது (எனது பாணியில்) காழ்ப்புணர்ச்சியால் துடிக்கும் புழுப்போன்ற நட்புக்களுக்கும், இலக்கியத்தின்பால் நான் தலைகாட்டமலிருக்க வேண்டும், சோம்பியிருக்க வேண்டும் எனும் நோக்கில் தீயனவியற்றி - என்னை மென்மேலும் எழுதத் தூண்டும் நல்லிதயங்களுக்கும் என் நன்றி உரித்தாகுக!

முகநூலில் என் ஆக்கங்களைக் கண்டு காழ்ப்புணர்ச்சியுடன் விமர்சிக்கும் 'நல்லறிஞர்களுக்கு' விசேட நன்றி!!

யார் ஏது சொல்லிடினும் என் கவிக்கரங்கள் ஓயாது....
எனக்கேயுரித்தான் பாணியில் ஆக்கங்கள் எழும்.........
காலத்தில் ஒருநாள் என் ஆக்கங்கள் பேசப்படும் என்ற நம்பிக்கை எனக்குள் உண்டு! (அன்று வையத்தில் நான் கண்டு சந்தோசிக்க இல்லாதிருக்கலாம்...!)

நம்பி கைவைத்தேன்... நம்பிக்கை வீண்போகாது!

தாய்த்தமிழை நேசித்தேன்... எனக்கு உண்டிதருவது இறையருளொடு  தமிழ்!

-'கவித்தீபம்' இஸ்மாயில் எம். பைரூஸ்

இணையத்தில் வெளிவந்த செய்தி....


சான்றிதழ்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக