It கலைமகன் கவிதைகள்: ​மேதினியில் மேலெழுவோம்! - கலைமகன் பைரூஸ்

வெள்ளி, 1 மே, 2015

​மேதினியில் மேலெழுவோம்! - கலைமகன் பைரூஸ்


சிங்க ஏறுகள் எலிகளை நசுக்கி

சிம்மாசனத்தில் அமர்ந்து
பூனைகளின் கால்களால் நசுங்குவதை
வேடிக்கை பார்க்கின்றன இன்றும்...

முற்று முழுதாய் நசுக்குவதையே
மேதினியில் பெரும்பேறாய்க் கொண்டு
மேதினம் வேறு கொண்டவதில்
மும்முரமாய் நிற்பவனும் ஏறுகள்தாம்!

பாரையே வடிவமைக்கும் உழைப்பாளி
பாரில் திரண்டெழுந்தால் பாரழியும்
பாராளுமன்றமும் நிலத்திற்சாயும் என்பது
பாராளும் வர்க்கத்திற்கு தெரியாமலில்லை...

இம்மியும் இடைவெளிவிடாது அவனுதிரம்
இத்தரைமீது வீழ்வதையே விரும்பும்
இச்சிங்கவேறுகள் எலிகள் வலிபற்றி
இங்கறிந்தும் இன்றும் மேதினம்மட்டுமே!

கைகட்டி வாய்புதைத்த காலம்போதும்
கரமுயர்த்தி உரிமைக் குரலெழுப்பி
கையாலாகாத வர்க்கத்திற்கு பாடம்சொல்லி
கைதிநிலையறுத்து பணிபுரிவோம் தரமாய்!

மேதினிமேன்மையுறப் பாடும்
மேம்பட்ட பாடுபடுவார் அனைவருக்கும்
மேலுயர்ந்த வாழ்த்துக்கள் நலம்வாழ
மேலவ னல்லாஹ் அருள் புரிவானாக!

-கலைமகன் பைரூஸ்
01.05.2015

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக