It கலைமகன் கவிதைகள்: மெய்யொடு வாழ்வாய் நீ!

புதன், 20 ஏப்ரல், 2016

மெய்யொடு வாழ்வாய் நீ!

மும்மையும் மலராய் படைத்தவன்
மதியினும் மேலாய் தந்தானென்கு
இம்மையினில் சீராய் ஒருமகவு
இன்னலில்லை இடுக்கணிலை இவள்
அருகிருக்க கவலையே இலைஎன்னில்!
----
காரிருள் தோற்கும் இவள் சிகையில்
கதிரவன் தோற்பான் இவள் ஒளியில்
கணைகள் தோற்றிடும் இவர் நுதலில்
கதிரவன் ஏங்குவான் வால் எயிற்றில்…
----

அன்புக்கு அர்த்தம் சொல்பவள் இவளேதான்
அருகிருந்து அன்பு கற்பிப்பவள் இவளேதான்
துன்பமில்லை இவளழில் இலயத்திடவே
துனியாவில் பேருற்றேன் இவள் வரவே!
----
நல்லறிவு நாளுந்தான் இவள்கற்று
நானிலத்தில் நனிசிறந்து புகழ்சேர்க்க
புல்லரறிவினை கடிந்து கவியியற்ற
பாங்காய் மக்கள் கலிநீக்க வேண்டுமே!
----
வாட்டமுறும் மக்கள் துன்பந்தீர்த்து
வாடியே வருபவர்க்காய் கனிந்துருகி
தேட்டத்துடன் அவர்தம் குசலம்வினவி
தெவிட்டாத அறிவுரைதான் தரவேண்டும்!
----
இல்லாத மக்களுக்கு இதயம் திறந்தே
இன்சொல்தான் ஈயவேண்டும் நாளுமிவள்
எல்லோரும் இவள்நகையால் பூத்தே
ஏற்றம்தான் காண மகிழவேண்டும் நானே!
----
பொல்லாத பாரினிலே பிறந்த பாவையிவள்
பாங்காக மறைதனையே வாழ்வில் கொண்டு
நில்லாத நிலத்தினின் உண்மை தெளிந்து
நாளை மறுமைக்காய் தேடவேண்டும் நன்மை!
----
ஊர்மணந்தான் வானெங்கும் முட்டி
உயர்ந்திடவே உள்மனந்தான் ஏங்குதே
பேரிலெனையும் சேர்த்திவள்தான் நாளை
பெண்மைக்கு இலக்கணந்தான் சேர்க்க…
----
மெய்ம்மறையின் மெய்ம்மையினை யுன்னி
மண்ணினின் வாழுமட்டும் மெய்யைப் பற்றி
பொய்யுலகில் பேணிட வேண்டும் பெண்மை
படைத்தவன்தான் ஏற்றிட ஏந்தினன் கையே!
----
-கலைமகன் பைரூஸ்20.04.2016 22.06

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக