It கலைமகன் கவிதைகள்: மலையகத்தானில் ஏனிந்த சீற்றம்? - கலைமகன் பைரூஸ்

செவ்வாய், 3 டிசம்பர், 2019

மலையகத்தானில் ஏனிந்த சீற்றம்? - கலைமகன் பைரூஸ்

காந்தள் விரல்கள் கருவடு மேய்ந்திட
காலம் முழுதும் மாற்றான் மகிழ்ந்திட
எந்தன் பரம்பரை உழைத்துத் தேய்ந்தது
ஏனிப்படி ஏணிப்படியெமை தூற்றுவது

ஈழநாடு பெருமை பெற்றிட எம்மவர்
இரவும் பகலும் கஞ்சி குடித்திட
தோழமை பூத்து குளவிகள் கொட்டிட
தேநீரெமை நீரேனோ வைவது இழுக்காய்!

பாம்புகள் கால்களை மாலையிட நிதம்
பிஞ்சுகள் லயத்தினில் தூங்கிட நிதம்
வீம்பாய் பேச்சுக்கள் பலநூறு நிதம்
வாங்கும் நம்மவர் ஏனோ இழுக்காயுமக்கு!

பச்சை போர்வை பரப்பியே பாரில்
பாங்காய் நிற்பது நம்நிலமே - எண்ணு
இச்சையொடு நீயருந்தும் தேநீரும் நாளை
இகழும் உன்பேச்சினை யுன்னி பாரும்!

சிந்தைக் கினியார் வாழ்ந்திடும் நிலமிதில்
சிறப்பே நிலபுலமெங்கும் சிறப்பே பாரீர்
விந்தை மனிதர் நீரரன்றோ - இகழ்ந்திடல்
விதவிதமாய் உனைப்பேச வழிசெயும் நினை!

தேனருவி திரையெழுப்பிப் பாயும் மண்ணில்
திக்கெல்லாம் பசும்பொன்னே அறிவாயா ஐய
கூனவரும் சோம்பலிலை உழைப்பர் காண்
குந்தித் தின்பர் தம்முழைப்பை ஏத்தியேத்தி!

மலையக மைந்தனின் வழி நானென்று
மாபெருமை வழிந்தோட சொல்வேன் நான்
விலையிலா உழைப்பே உயிராய்க் காண்
வார்த்தையிலை எம்மண் ணருமை சொலவே!

- கலைமகன் பைரூஸ்






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக