It கலைமகன் கவிதைகள்: தென்மாகாணக் கலைஞர்களுக்கான ஒன்று கூடல்

ஞாயிறு, 13 ஜூன், 2021

தென்மாகாணக் கலைஞர்களுக்கான ஒன்று கூடல்

 தென்மாகாணக் கலைஞர்களுக்கான ஒன்று கூடல் ஒன்று ZOOM _ Meeting தொழில்நுட்பத்தின் துணையோடு நேற்று (12.06.2021) மாலை 4.00 மணியளவில் முஸ்லிம் கலாச்சாரத் திணைக்களத்தின் கௌரவப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.பீ.எம் அஷ்ரப் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

சூறா பாத்திஹா ஓதலுடன் இந்த ஒன்று கூடலை ஆரம்பித்து வைத்த கௌரவப் பணிப்பாளர் அவர்கள் கலாச்சார திணைக்களத்தின் சார்பில் இணைந்திருந்த அனைத்து கலைஞர்களையும் வரவேற்றதோடு முஸ்லிம் கலாச்சாரத் திணைக்களத்தின் செயற்பாடுகள் பற்றிய குறுகிய விளக்கமொன்றையும் முன்வைத்தார்.

வருடாவருடம் கலைஞர்களுக்கான கலாபூசணம் விருது வழங்கும் நிகழ்ச்சி மற்றும் மீலாத் விழா போட்டி நிகழ்ச்சிகளை மாத்திரமே தாம் கலாச்சாரத் திணைக்களத்தினூடாக நடாத்திச் செல்வதாகவும் அதற்கான நிதி ஒதுக்கீடுகள் அரசாங்கத்தால் வழங்கப் படுவதாகவும் ஆனால் அதனைக் கொண்டு வேறு நிகழ்ச்சிகள் நடாத்த நிதி போதாமல் இருப்பதாகவும் குறிப்பிட்டார். ஆனால் இயன்றளவு அவற்றில் இருந்து ஒரு சிறு தொகையை மீதப்படுத்தி அதனூடாக நாட்டின் பல பாகங்களில் இருக்கும் கலாச்சார நிகழ்ச்சிகளை கண்டு பிடித்து அவற்றோடு தொடர்புடைய கலைஞர்களையும் இனங்கண்டு இவற்றை முன்னெடுத்துச் செல்லும் நோக்கிலேயே இவ்வாறான கலைஞர் சந்திப்புக்கள் ஏற்பாடு செய்யப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

தென்னகத்தின் புகழ் பூத்த பல கலைஞர்கள் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டதோடு தமது ஆக்கபூர்வமான அபிப்பிராயங்களையும் அவர்கள் முன் வைத்தார்கள்.

வெலிகமையைச் சேர்ந்த கலாபூசணம் ஹபீபுர் ரஹ்மான் ஆசிரியர், கலாபூசணம் யூசுப் ஆசிரியர், ஆகியோர் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கும் போது “இவ்வாறான சந்திப்பொன்றை ஏற்படுத்தியது காலத்தின் தேவையாகும் ” என்று குறிப்பிடப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து பிரபல எழுத்தாளர் கலாபூசணம் திக்குவல்லை கமால் அவர்கள் மிகவும் பயன்மிக்க பல கருத்துக்களை முன்வைத்ததோடு பிரதேச ரீதியில் கலைஞர்களை இனங்கண்டு அவர்களுக்கான ஒன்றுகூடல் இடம் பெற வேண்டும் என்று வலியுறுத்தி பேசினார்.

அதனைத் தொடர்ந்து கலைமணாளன் ஹிஷாம் அவர்கள் இந்தக் கலந்துரையாடல் பற்றிய தமது கருத்துக்களையும் எதிர்கால சந்ததியினர் மத்தியில் கலையையும் கலாச்சாரத்தையும் கொண்டு சேர்ப்பதன் அவசியம் பற்றியும் எடுத்துரைத்தார். அதனைத் தொடர்ந்து கலைமகன் பைரூஸ் அவர்கள் பல முக்கியமான விடயங்கள் சம்பந்தமாக அனைவரின் கவனத்திற்கு கொண்டு வந்தார். அதில் மிக முக்கியமாக கலைஞர்களுக்கான ஆள் அடையாள அட்டையின் முக்கியத்துவம் பற்றியும் அவை போன்ற வரப்பிரசாதங்கள் தென் மாகாணத்தில் வசிக்கும் கலைஞர்களுக்கு வாய்க்காதது பற்றியும் எடுத்துரைத்தார். அதனைத் தொடர்ந்து பேசிய இஸ்பஹான் அவர்கள் இந்த சந்திப்பு மிகவும் முக்கியமான நிகழ்வு என்றும் இதில் தம்மை இணைத்தவர்களுக்கு நன்றி கூறுவதாகவும் இந்த நிகழ்வை முன்னெடுத்துச் செல்ல தமது ஒத்துழைப்பை தொடர்ந்து தருவதாகவும் தெரிவித்து விடைபெற்றார்.

அதனையடுத்து மூன்று மாவட்டங்களுக்கான ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டனர். காலி மாவட்டம் சார்பாக எம்.ஜே.எம் ஹிஷாம், மாத்தறை மாவட்டம் சார்பாக கலைமகன் பைரூஸ், மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டம் சார்பாக ஆசிரியை சனூரா ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டதோடு மாகாண ஒருங்கிணைப்பாளராக கலாபூசணம் திக்குவல்லை ஸப்வான் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள்.

அதையடுத்து உடனடியாக அமுல்படுத்தப்பட வேண்டிய மூன்று திட்டங்களை பணிப்பாளர் அவர்கள் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

  1. மாகாணத்தில் வாழும் கலைஞர்கள், இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், நுட்பக் கலைஞர்கள், கலை இலக்கிய ஆய்வாளாகளையும் இணைக்க வேண்டும்.
  2. கலையோடு, கலாச்சாரத்தோடு தொடர்புடைய அனைவரையும் குறிப்பாக முன்னர் எழுத்துலகில் மிளிர்ந்து தற்போது அவைகளில் இருந்து விலகியிருக்கும் அனைவரையும் ஒன்றிணைக்கப் பட வேண்டும்.
  3. தென் மாகாணத்தில் இருந்து மறைந்து போன படைப்பிலக்கியங்கள், நாட்டார் பாடல்கள், கலாச்சார நிகழ்ச்சிகள், சிலம்படி, சீனடி போன்ற விளையாட்டுகள் பற்றியும் அவற்றோடு தொடர்புடையவர்கள் பற்றியும், அவற்றை ஆய்வு செய்வோர் பற்றியும் அறிந்து அவற்றை மீண்டும் கட்டியெழுப்பி எதிர் கால சந்ததிகளின் மத்தியிற்கு கொண்டு செல்வதற்கான திட்டங்களை வகுத்தல்.

தொடர்ந்து திக்குவல்லை மின்ஹாத் தேசிய பாடசாலையின் அதிபர் மஸாஹிர் ஆசிரியர் அவர்கள், கவிதாயினி நூருல் ஐன் நஜ்முல் ஹுஸைன், கலாபூசணம் பீ.எம்.எம். மொஹமட் மற்றும் இன்னும் பல கலைஞர்கள் தமது ஆக்கபூர்வமான கருத்துக்களை முன் வைத்தனர்.

இறுதியாக இந்நிகழ்வில் இணைந்து கொண்ட இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் தயாரிப்பாளரும் பிரபல ஊடகவியலாளருமாகிய இஸ்பஹான் சாப்தீன் அவர்கள் தென் மாகாணத்தின் கலைஞர்களை ஒன்றிணைக்கும் இந்த மேடையை தாம் மகிழ்ச்சியோடு வரவேற்பதாகவும் அதன் செயற்பாட்டிற்கான நேரடியான பங்களிப்பை தான் எதிர் காலத்தில் நல்குவதாகவும் தெரிவித்தார்.

தென்மாகாண கலைஞர்களின் அடுத்த சந்திப்பு எதிர் வரும் 26.06.2021 இரவு 8.00 மணிக்கு இடம் பெறுவதாக அறிவிக்கப் பட்டதோடு இந்நிகழ்வு மாலை 5.25 மணியளவில் கனிய ஸலவாத்தோடு இனிதே நிறைவு பெற்றது.

-கலைமணாளன் ஹிஷாம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக