It கலைமகன் கவிதைகள்: கலைச்சுடரே வாழ்க! - 'தமிழ்ச்சுடர்' கலைமகன் பைரூஸ்

வெள்ளி, 6 அக்டோபர், 2023

கலைச்சுடரே வாழ்க! - 'தமிழ்ச்சுடர்' கலைமகன் பைரூஸ்


வாரிஸலி மௌலானா வெனும்பெயர் கொண்டு

எம்மனத்தில்  ஆழப்பதிந்து இருப்பாய்க் கொண்டு

சீரியராய் சிந்திக்க இனியராய் இருப்பதற்றான்

சீர்கவிதை எழுதித்தான் புகழ்கின்றேன் இந்நூல்கண்

பேரிலுள  மௌலானா  வெனும்பதந்தான் உயர்விங்கு

பேருக்கேற்ற பணிசெய்த பண்பாளர்  மௌலானா

வேராகப் பள்ளிகளில் விதந்துரைக்கப் பணிசெய்தார்

வளமதுதான் நற்பணிதான் வையத்து நற்கல்வியே!


ஈழத்துச் சிறுமக்கம் வெலிகமவின் நல்லாரிவர்

இதயத்தொட்டும் ஹாஷிம் குலத்து சீரியரிவர்

வேழந்தான் நற்றமிழில் இவர்தாதை வழிவந்தோர்

வான்மறை மொழியினிலும் உயர்ந்தோர் தாமிவர்கள்

எழிலாயும் பொழிலாயும் தரங்குறையா நூலுமீந்தார்

ஏற்றங்கொள் கலைச்சுடர் நாமத்தினின் ஈந்தார்

அழியாமல் ஆழ்மனதில் குடிகொண்ட மௌலானா

யாஸீன் மௌலானா வழிவந்தார் இந்நிலந்தானே!


பல்லாண்டு பண்பாகப் பள்ளியினிலே பணிசெய்தார்

பக்குவமாய்ப் பிள்ளைகள் படித்திடத்தான்  செய்தார்

நல்லாரின் சங்கமத்தை நாடிச்சென்று நிலத்தில்நீள

நம்மவர்தான் நலமான நற்கருமம் பலசெய்தார்

தொல்லைகள் துயர்களோட்டி துணிந்தே நின்று

தெவிட்டாத கன்னலதாய் பல்லோருடன் பேசிநின்று

இல்லைநேரந்தான் எனச்சொலாது எந்நாளும்

இதமாகப் பணிசெய்தார் நம்மௌலானா இவரே!


தருமமதை வாழ்வினடிப் படையாய்க் கொண்டே

தனக்கென வாழாமல் மாணாக்கர்க்காய் வாழ்ந்தார்

கருமத்தைச் செய்தற்கு உயர்வுதாழ் வெதுவும்பாரார்

கடமைக்கண் ணியம்கட்டுப் பாட்டைப் பார்ப்பார்

பெருமைசே ரிலட்சியத்தை பேணியே யிவர்நின்றார்

பெற்றோ ரிலட்சியத்தில் கண்ணாயுந் தான்நின்றார்

பெருமையே பல்லோரை அன்பாற்றான் திருத்திட்டார்

பூதலத்து பெருமைதான் கொண்டார்  மௌலானா!


இருள்நீக்கும் விஞ்ஞானம் என்றாலே ஒருக்கால்

இதயத்து பூத்துவருவார் வாரிஸ் அலிமௌலானா

தருமசங்கடமாய் விஞ்ஞானம் இருந்தார்க்கு மௌலானா

தேனும்பாகும் கலந்தாற்போல் தந்தார் இனிதாக

கருமையிலை வெண்பாவே அவர்தந்தன வெல்லாம்

கல்புக்குள் மெச்சிநிற்கும் அவர்தந்த கல்விஞானம்

தருமந்தான் கல்வி வல்லோராய்ச் செதுக்கிடவே

தரமான பணிசெய்தார் பல்லாண்டு வாழ்க!


சில்லறைகள் சிறுமையாய்க் கர்ச்சித்தபோதும் இவர்தான்

சிகரமதை கண்ணுற்று ஊளையிடு வனவாய்த்தான்

சொல்லாமல் நற்பணிகள் பன்னூறு செய்தாரிங்கு

சொல்வர் பயன்பெற்றார் உளத்துண்மை கண்டார்

இல்லையில்லை யிவரில் தலைக்கன மேதுமில்லை

இதமாகப் பேசியுளத்து நிறையும் இனியரிவர்

கல்விக்கினியர் வாரிஸ்அலி  மௌலானா என்றேன்

கல்விச்சுடர் நாமமதில் கலைச்சுடரே  வாழ்க!


-மதுராப்புர, கலைமகன் பைரூஸ்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக