It கலைமகன் கவிதைகள்: உங்களுக்குத்தான் சொர்க்கமா?

சனி, 14 டிசம்பர், 2013

உங்களுக்குத்தான் சொர்க்கமா?

நீங்கள் பௌத்தர்கள்
தூபிகளில் அநுட்டானங்கள்
தொடர்ந்தும் செய்கிறீர்கள்…
நீங்கள் இந்துக்கள்
உங்கள் இன்பத்திற்காக
பலவும் பண்பாய் ஆற்றுகிறீர்கள்…
நீங்கள் முஸ்லிம்கள்

நீங்கள் சொர்க்கம் பெற
ஐவேளைத் தொழுகிறீர்கள்…

நீங்கள் வயிறு முட்டச்
சாப்பிட்டுவிட்டு
மீதமாவதை
உங்கள் வீட்டின் மருகில்
அழகாக வைத்துள்ள
கூடையில்
ஆழ அமுக்குகிறீர்கள்…

உங்கள் வீட்டுப் பக்கத்தில்
நாங்கள் பிச்சை கேட்டு
பாத்திரம் ஏந்தி வரவில்லை
ஆனாலும்
உங்கள் வீட்டுப் பக்கத்தில்
தேங்கிக் கிடக்கின்ற
கழிவுநீர் படிமத்தில்
ஏதேனும் இருக்கின்றதா
எனப் பார்ப்பதற்கு
நாங்கள் வருகிறோம்…
பெரு வலி சுமந்து
ஏன் தெரியுமா?
நீங்கள் உயர்சாதியினர்
நாங்கள் இல்லாதவர்கள்
ஆதலால்
நாங்கள் இழிந்தவர்கள்!
உங்களுக்கு சுவர்க்கம்
எங்களுக்கு இல்லையாதலால்
எங்களுக்கு நரகமாக
இவ்வுலகம்….

மேடை போட்டு
மடைதிறந்து பேசுகிறீர்கள்…

மேடைக்குப் பக்கத்தில்
அழுக்கடைந்த ஆடையுடன்
கிழிந்த பொதியுடன்
நாங்கள் நின்றுகொண்டு     
நாயாய் நாக்கை நீட்டி
பார்ப்பதை
நீங்கள் பார்க்கிறீர்கள்…

அடச்சீ…
வெட்கம் கெட்ட ஜென்மம்
என எங்களை ஏசுகிறீர்கள்…

உங்கள் மதச் சாயமும்
இனச் சாயமும்
அகங்காரத் தோரணையும்
எங்களுக்கு உங்கள் மீது
அன்பினையே தருகிறது…

நீங்கள்
சிரிக்கிறீர்கள்
நாங்கள் ஒரு கவளத்துக்காய்
கண்ணுறங்காதிருக்கிறோம்..

எங்கள் வயிற்றுப்பசி
எங்களைச் சுட்டெரிக்கிறது
ஏன்தான் பிறந்தோம் என
எங்களை நாங்களே
நொந்தழுகிறோம்….

உங்கள் வீட்டு நாய்களுக்கும்
நல்ல உணவு….
எங்களுக்கு நாய் சாப்பிட்டு
மீதமான உணவையும்
தர மறுக்கிறீர்கள்
நாங்கள் தாழ்த்தப்பட்டவர்கள்
என்ற கழுகுப் பார்வை
உங்களில் தாண்டவமாடுவதால்…

நாங்கள் அணிகின்ற ஆடைகள்
நீங்கள் குப்பை டாக்டரில்
வீசிய உங்கள் ஆடைகள்…
எங்கள் அம்மணத்தை
ஒருவாரேனும் மறைக்கிறது…

நீங்கள் சுவர்க்கத்துக்குப் போகமுன்
அதன் கதவுப்பக்கமிருந்து
எங்களுக்கு ஒருமிடர் தண்ணீர்
உங்கள் கரங்களால்
தந்துவிடுவீர்களா…?

புனிதமானவர்களின்
கரங்களால் தந்த
தண்ணீரை நாங்கள்
அருந்தியதால் எங்களுக்கும்
சுவர்க்கத்தில்
இடம்கிடைக்குமாக்கும்!

-“கவித்தீபம்” கலைமகன் பைரூஸ்
14 – 12 – 2013 8 59

தினகரன் வாரமஞ்சரிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
முகநூல் உறவுகளின் கருத்துக்கள்
FACE BOOK FRIENDS Opinions:

//Rups Robin முரண்பாடுகள் நிறைந்த உலகில் .. வாழ்வதே அரிது.. அதுவும் இந்த வறுமை என்ற கொடுமையை அனுபவிக்கும்... இளம் வயதிலே அனுபவிக்கும் கொடுமை... அனைத்து மதமும் அன்பினை மட்டுமே அடிப்படையாக வலியுறுத்துகின்றது.. அதனை மறுத்தது அத்தனை மனிதமும்..மதம் புனிதம் நிறைந்த ஒன்றுதான்.. மனிதம் அதனை மதிக்க தவறிவிட்டது..மனிதம் தனது தன்மையை அழித்துகொண்டது.. மனம் மாறுதல் வேண்டும்.. மதம் அவரவர் வீட்டினுள் இருக்கட்டும்.. நன்று..
13 hours ago · Unlike · 4

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ இதயம் தொடும் கவிதை. நன்றி.
12 hours ago · Unlike · 2

Arr Ahamed புனிதமானவர்களின்
கரங்களால் தந்த
தண்ணீரை நாங்கள்
அருந்தியதால் எங்களுக்கும்
சுவர்க்கத்தில்
இடம்கிடைக்குமாக்கும்!
12 hours ago · Unlike · 2

சிறீ சிறீஸ்கந்தராஜா பைரூஸ் அவர்களுக்கு.... சரி.. உலகம் இப்படி இருக்கிறது!! இப்படித்தான் இனியும் இருக்கப் போகிறது!! இதற்குத் தீர்வு?? உங்களிடமும் இல்லை!! என்னிடமும் இல்லை!! ஒன்று மட்டும் உண்மை!! எல்லாப் பூக்களும் இறைவன் பாதத்தில் பூஜைக்காகப் போய் விழுவதில்லை!! சில பூக்கள் சாக்கடையிலும் விழுகின்றனவே!! சில பூக்கள் பிணத்தின் மீதும் விழுகின்றனவே!! இது என்ன தர்மம்??
8 hours ago · Unlike · 3

Ratnasingham Annesley · 28 mutual friends
நீங்கள் சுவர்க்கத்துக்குப் போகமுன் அதன் கதவுப்பக்கமிருந்து எங்களுக்கு ஒருமிடர் தண்ணீர் உங்கள் கரங்களால் தந்துவிடுவீர்களா…? புனிதமானவர்களின் கரங்களால் தந்த தண்ணீரை நாங்கள் அருந்தியதால் எங்களுக்கும் சுவர்க்கத்தில் இடம்கிடைக்குமாக்கும்! Super.
6 hours ago · Unlike · 1

Baskaran Ranganathan ஆதரவற்றோர் குரலில் அழகான உணர்வுக் கவிதை
அன்புக்கரம் தேடி ஏங்கும் எளியோர் குரலில்
வம்புசெய் மாந்தரை வகைவகயாய்க் கடிந்தே
நானிலத்து நற்பயன் பெறக் கூறும் வரிகள்
காநிலத்து மழையென வளம் பொழிந்ததிங்கே!!
4 hours ago · Unlike · 1//

2 கருத்துகள்: