It கலைமகன் கவிதைகள்: சாதித்துவத்துக்கு சாவுமணியடிக்க சனனித்ததுவோ சுனாமி!

வியாழன், 26 டிசம்பர், 2013

சாதித்துவத்துக்கு சாவுமணியடிக்க சனனித்ததுவோ சுனாமி!

அழகான கடல்மீது
அழகான கையெழுத்தில்
அழகாக எழுதியெழுதி
அழகுபார்த்திருந்தோம் நாம்!

அடுக்கடுக்காய் நண்டுகள்
ஆழச் சென்று ஆழிமீதுவந்து
அதன்மீதே பார்வையெலாம்

அள்ளிச் சேர்ந்ததுவே…
அகத்தினின் துன்பம் களைந்து
ஆடிமகிழ்ந்திருந்தோம்
ஆழியின் கரைமீது நாமன்று!

விளம்பரங்கள் செய்யாது
ஆர்ப்பரிப்பது ஏதுமில்லாது
அடியவரின் பாவங்கள் பொறுக்காது
திரண்டு வந்ததுதான் பாரும்
ஆழிதிரண்டு பேரலையெழுந்து
ஆழிப் பேரலையாய்….
ஊரைச் சுருட்டிச் சென்றது
அலைநாவினால் சுருட்டி….!

அன்று பிறந்த பாலகரும்
அன்று கரம்பிடித்த தம்பதியும்
அன்றுதான் பட்டம் பெற்றவரும்
அன்றுதான் வம்பு செய்தவரும்
ஏன்?
இறையைத் துதித்து நின்றவரும்
அழிந்தனர் ஆழிப் பேரலையின்
அசமந்த சீற்றத்தினால்…
அந்தச் சீற்றம்
எதற்கு வந்தனையோ என
ஏங்குகின்றனர் இன்று….

அன்று
அழித்தது இல்லம்
அழித்தது மந்தைகள்
அழித்தது மீனவ வாடிகள்
அழித்தது எல்லாமே
அழிந்தன எல்லாமே

அன்று ஏன் ஆழிப் பேரலை
அப்படி வந்தது என
அடியார்கள் ஆண்டவனிடம்
அன்று ஒப்பாரியுடன்
ஆடியொடுங்கி கேட்டனர்!

அடுத்தவரை அண்டி
அடித்துச் சுருட்டி
அடிமையை உதைத்து
அரசன் ஆண்டி பார்த்து
அண்டாது விலக்கி
ஆர்ப்பரிப்புடன் நசுக்கி
அடிமைத் தளை சேர்த்து
ஆக்கிரமிப்புச் சிந்தனையுடன்
அயர்ந்து தூங்கியே இருந்து
ஆண்டவனை மறந்து
அடியார் இருந்ததனாலன்றோ
ஆழிப்பேரலை வந்தது
அடித்துச் சென்றது
அப்பாவிச் சனங்களையும்
அடப்பாவமே!

அற்பமான சாதித்துவத்தை
அத்தாணி மண்டபத்தில்
அரசோச்சச் செய்தவர்களை
அழுக்காகவே கண்டோம்
உருக்குலைந்தே கண்டோம்
உடல் அறியாது கண்டோம்
உடலிதுவா இவர் என்றோம்
உச்சாணி நின்றாலும்
உயர்வு தாழ்வினை
எண்ணித் தானும் பாரோம்
என்று எண்ணினோம்நாம்…

வங்கக் கடல்
வாங்கிச் சென்ற உடலங்கள்
வாங்கவில்லை ஊர்பேர்
வந்து ஓய்ந்த இடங்கள்
வாங்கின அவற்றிற்கு ஊர்!

ஆடிப் போயின உளங்கள்
ஆராத பெருந்துயரில் திளைத்தன
ஆண்டாண்டு சென்றாலும்
ஆழிப்பேரலை அணையாது
அகத்தில் ஆழநிற்கும்…
என்றனர் எலோரும்…!

ஒன்பது ஆண்டுகள் கழிந்தன..
ஒப்பாரி வைக்காத உளம்
இன்றுமில்லை…
என்றாலும்
தன்னை மாற்றாத மனிதன்
தரணியின் இன்றும் அன்றாய்
தன் தீய சிந்தையுடன்
திரிந்தே திரிகிறான்…

அன்றுதான் விட்டானா?
ஆழியின் சீற்றம்
ஆடியொடுங்கிய அக்கணத்து
அணைந்து போயின
உடலங்களில் சேர்ந்திருந்த
அருமந்த பொருட்கள்
அறுக்கப்பட்டன
அறுவறுக்கத் தக்கவர்களால்…
வந்திருக்க வேண்டியது
அவருக்குத்தான் என்றாலும்
ஆண்டவன் விட்டுப்பிடிக்கவே
ஓயச் செய்தான்…

ஆழியின் முரட்டு ஓவியம்
அழியாது உளது கண்களில்..

அழியாது விட்டால் நிச்சயம்
அரசோச்சும் சாதித்துவம்
முரட்டுத்தனமாய் மீளவும்
எங்களைச் சந்திக்கவரும்
மீண்டும் ஒரு ஆழிப்பேரலை
எல்லாம் அறிந்தவன்
எடுப்பினைக் காண்பரப்போ!

எல்லாமும் இழந்தே
ஆழிப் பேரலையால் தவித்த
எல்லோர்க்கும் எந்தனின்
பிரார்த்தனைகள்…!

“கவித்தீபம்”
கலைமகன் பைரூஸ்
26-12-2013

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக