It கலைமகன் கவிதைகள்: மீனவர் நாமல்லோ..துயரமும் எமதல்லோ!

வியாழன், 23 அக்டோபர், 2014

மீனவர் நாமல்லோ..துயரமும் எமதல்லோ!

ஏலோ ஏலோ ஏலேலோ
எங்கள் துயரம் போகவல்லோ
காலம்புர வாரதற்கு – நாம்
கடல் கடந்து செல்கின்றோமே!

கட்டுவல ஏந்திக் கிட்டு ஏலேலோ
கட்ட சுறா கெலவல்லன் பிடிப்பதற்கு
இட்டம் இலாமலும் ஏலேலோ
இதயம் கனக்க போகின்றோமே!

சீரிப்பாயும் அலைக்குள்ளால் ஏலேலோ
சிந்தித்து குடும்பத்த ஏலேலோ
வீரியமாய் வீசுகின்றோம் வலையல்லோ
வாடாதிருந்த குடும்பம் ஏலேலோ

காலம்புர பிடிச்சுவந்த மீனத்தான் ஏலேலோ
கடனுக்கு விக்கிறம்நாம் ஏலேலோ
குழந்த குட்டி வாழத்தான் ஏலேலோ
கடல் கடந்து உடல்மறந்து போகின்றோமே!

கடல்நண்டு தரைமீது வருவது போலல்லோ
கடல் கடக்கும் எம்வாழ்வும் ஏலேலோ
குடல்நடுங்க குலைநடுங்க ஏலேலோ
கடல்சீரும் உளம் நாடும் ஏலேலோ
கடவுளை நாம் நினைப்போம் ஏலேலோ

மீனுண்டு எம்முணவில் ஏலேலோ
மீதமாக என்றும் கடனுண்டு ஏலோலோ
தானுண்டு இருப்பதற்கும் ஏலோலோ
தரவேண்டும் மீன்கள்தான் இறையோனே!

துன்பங்கள் துடைப்பதற்கு ஏலேலோ
துயர்கொடுத்து செல்கிறோம் ஏலேலோ
இன்பம் வாழ்வில் இறங்கிட ஏலேலோ
இறைவா இக்கரையே இன்பம் தரவேண்டும்!

-கலைமகன் பைரூஸ்
22.10.2014 11.44


(கருவாகப் படம்தந்த மருநதிலா நியாஸுக்கு நன்றிகள்!)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக