It கலைமகன் கவிதைகள்: நீயன்றி யாரழிப்பர் CORONA (Covid - 19) வை!

சனி, 21 மார்ச், 2020

நீயன்றி யாரழிப்பர் CORONA (Covid - 19) வை!



தரணியின் முடிவு வந்துற்றதோ கொரோனா
தானாக வந்துற்றதோ தனிமையின் வாட
பேரணியாய் பயந்து மக்கள் எலோரும்
பரிதவிக்க காரணந்தான் ஏதிறைவா நீயறிவாய்!

உன்னருஞ் செயல்களில் நாட்டமின்றி நிலத்தார்
உயர்ந்தே நின்றிட பற்பல ஆற்றினர் பேராய்
சின்னவருஞ் சாகின்றார் எந்நேரமோ எனச்சொல்லி
சகமனைத்தும் படைத்தோனோ நீயன்றி யாரறிவார்?

விடப்பல்லுடை நாகமும் நீவிலக்கிய பல்லுயிரும்
விந்தை மனிதர் உண்டனரே அதனாலோ
திடமாக ஏதென்று நீயன்றி ஆரறிவார்
திடமான மனதுடன் இருந்திடச் செய்யிறைநீ!

பூதலத்தில் பயங்கரமாய் பற்பலநிகழ்த்தினையே
படைத்தவன் எனைப்பணிந்து நடவென்று நீயேதான்
காதினிலின்னும் ஏறவிலையே கயிறுனது பலமென்று
காணவிலையே கதறுகிறார் முகமூடியோ டின்றுதான்!

சீனத்து உயிர்களொடு பன்னாட்டு உயிர்களெலாம்
சீவனமாய் தொற்றுகிறதே கொரோனோ வைரசுதான்
ஊனமாய் மானுடந்தான் கைகுலுக்கவும் அஞ்சுகிறார்
உதறித்தள்ளுகிறார் உண்மை நட்பையுந்தான் இறைவா!

சுத்தம் பற்றியும் மறைத்தலின் வனப்புந்தான்
சாந்தி நபிசொன்னாரே நகைத்தனர் பல்லோர்தான்
சுத்திசெய்து கரங்களைத்தான் இல்லத்து இருங்களென்று
சொன்னமொழி வாழுதே இறைவா நீபெரியோன்!

பாரெங்கும் கடவுள் ஆசிக்காய் ஏங்குதேயல்லாஹ்
பந்தாடும் வைரசுக்கு முடிவுகொடு உன்கருணையால்
சீரெங்கும் உன்னன்பின்றி சிதைந்துவிடும் சகமெங்கும்
சாக்காடாகிவிடும் அழித்தொழி பேரிறை கொரோனாதான்!

-மதுராப்புர, கலைமகன் பைரூஸ்
((Covid-19)உலகக் கவிஞர்கள் தினம் 21.03.2020)











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக