It கலைமகன் கவிதைகள்: உனை நினைத்து!

வியாழன், 16 செப்டம்பர், 2010

உனை நினைத்து!


(என் தமிழ்க் கனிகையே...)
---------------------------------------------
உள்ளத்து ளுயிராய் வந்தாய்

உதிரத்து ளொன்றாய் கலந்தாய்

கள்ளுண்ட வண்டா யானேன்
கனிமொழி யுன்னிளமை கண்டேன்!
00000

இதழொடு இதழ் பதித்தாய்
இதமாக இதழ் குவித்தாய்
காதலா லுன்னில் பித்தாகி சித்திரித்தேன்
காதலியே என்றுமென்னுள் நீயே வேண்டும்!
00000
முத்தீ வளர்த்த சங்கத்தாளே  உன்
முன்னழகும் கண்ணுக்குள் சித்திரமாக!
சித்திபெற்ற சுந்தரியாள் நீ  எங்குமெதினும்
சிந்துவேன் நின்புகழ் ஞாலமீது மணியாக!
00000
புள்ளுறங்கும் கணமதுவும் பூவே நீ!
புழுங்குகின்றேன் பாரிலுன் நிலைகண்டு  யாண்டும்
நில்லாத நிலத்தினிலும் நீநிமிர வேண்டும்
நினையென்றும் நினைத்திடுவேன் நானே!
00000
உயிர்மெய்யா யென்னக மிணைந்தாய் - நின்
உயிர்த்துடிப்பதை ஆய்தமாய் வைத்தாய்!
ஆயுதமீந்து மெலிதெனை வலிதாக்கினாய்
ஆகாரமேனோ இடையுந் தானுன்னில் கண்டக்கால்!
00000
புல்லர்களுன் சத்தான இளமைகண்டும் - பூவே
புரியாமல் தலைகாலது பொய்செய்குவை!
மல்லர்தானு முனையிகழ்ந்தால் ஞாலமீதில் - நின்
மடிவீழ்ந்து சரண்புக வீழ்த்திடுவேனே!
00000
என்னிலக்கணமே நினதெழில் பைம்பூணாமோ?
எழுதுகின்றேன் நினதெழில் எழுதுகின்றேன்
உன்னை விண்ணதிரப் போற்றி யெழுதுகின்றேன்
உயிராய் வருக! என் தமிழ்க்கனிகை நீயே!

- கலைமகன் பைரூஸ்
இலங்கை

நன்றி
# முத்துக்கமலம்
# தினகரன் வாரமஞ்சரி

1 கருத்து:

  1. //இதழொடு இதழ் பதித்தாய்
    இதமாக இதழ் குவித்தாய்
    காதலா லுன்னில் பித்தாகி சித்திரித்தேன்
    காதலியே என்றுமென்னுள் நீயே வேண்டும்!//

    நல்ல கவிதை வரிகள்.
    தொடர்ந்து எழுதுங்கள்

    (சிந்தாமணி)

    பதிலளிநீக்கு