It கலைமகன் கவிதைகள்: நயினை தந்த நல்லாசான் நாகேஸ்வரன்!

திங்கள், 24 ஆகஸ்ட், 2015

நயினை தந்த நல்லாசான் நாகேஸ்வரன்!

நயினை தந்த நல்லதோ ராசான்
நெஞ்சத் தினிக்கும் நற்றமி ழாசான்
நயமாய் நெஞ்சத் தமர்ந் திட்டாசான்
நாகேஸ்வரன்  சங்கத்தினி லென் னாசான்!

குணக் குன்றாய பேச்சினின் மறந்து
கிடைக்காத தேனோ அன்றென்று மனம்
துன்புற்றதே யெந்தன் ஐயாவை யுன்னி
தெளிந்தே னின்றேனும் ஆசானே யென்று!


தரணியினின்; துன்பந் துச்ச மென்றே
சங்கத் தமிழ் வளர்த்திட வந்தவர்
தீர்த்திட என்தமிழ்த் தாகம் வந்தவர்
தந்தவர் முதனாலே தங்கத்; தமிழ்!

தாய்மொழி மாந்திட மாணாக்கர் நாம்
ஆய்ந் தளித்திடும் தமிழினி தினிதே
வாய்த்தே யெனக்கு நல்லாசா னாயவர்
வாகை சூடுவேன் நானினி தமிழில்!

அகவை யறுபது தாண்டியு மவர்
ஆடாது கற்பித்தாரே நற்றமிழ் சீராய்
அகம்; களிகொண்டது நேரே யவரால்
அல்ல லில்லை தமிழி லல்லலில்லை!

பல்கலையும் கற்றிட்ட பேராசா னவர்
பல்கலையில் ஆக்கிட்டார் அறிஞர் பலர்
சொல்வளமும் இசையுஞ் சொட்ட அவர்
சொல்வன யாவும் செம்மொழி தமிழே!

வித்தகத் திமிராய்; வருவார் முன்னிவர்
வித்தார கவியன்றே செப்புவன் நான்
வித்தை காட்டுவார் சங்கத் தமிழினில்
வெல்ல வெள்ளமென அவர்பேச்சழகே!

வாரிதி தமிழினில் வாகீச கலாநிதி
வித்தகச் செருக்கிலா கலை மாமதி
மாரி மழையன்ன தமிழ்ப் பூபதி
மனதினி னிறைந்த ஐயா நாகேஸ்வரன்!

கவிவம்பன் வழியினின் வந்தா ரிவர்
கவிபாடித் தந்தார் தரமாய்த் தமிழ்
நவின்றார் காலத்திடை வந்த தமிழ்
நலமே கற்றோம் நகேஸ்வரத் தமிழ்!

கணந்தான் தமிழ் தந்திட்ட போதும்
கண்ணுக்குள் ளமர்ந்த ஐயா அவரே
மணங் கொண்டது தமிழே அவரால்
மனமகிழ்வு இக்கணமும் ஐயா அவரால்!

மனத்தினின் தமிழ் நின்றிடவே அவர்
மருந்தாய் பொழிந்தார் சிரிப்பே பலவாய்
நன்றே நாளும் நினைப்பே னவரை
நலமாய்க் கற்பேன் நற்றமிழ் மங்கை!

பொத்தியிரு வெனும் ஆசான் நடுவண்
பெருமைமிக்க நல்லாசான் ஐயா அவரே
சித்தாந்த பண்டிதர் நாகேஸ்வரன் ஐயா
சிந்துவர் சீரே நற்றமிழ் தனையே!

களங்கமில் தமிழை கலைமகன் நானும்
கனிவாய்க் கற்றிட கால்மடித் தமர்ந்தேன்
களிகொண்டேன் களியே கொண்டேன்
காதல் மாணாக்கன் நானுந்தான் அவரில்!

பனுவல்கள் பலவீந்து பக்குவமுஞ் சொல்லி
பாங்காக தமிழ்தரும் ஐயா நாகேஸ்வரன்
மனைவி மக்கள் சுற்றத்தொடு நெடுநாள்
மாண்புற அல்லாஹ் அருள் கொடுப்பானே!

-கலைமகன் பைரூஸ் (Kalaimahan Fairooz)
22.08.2015


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக