It கலைமகன் கவிதைகள்: காத்திடு சீற்றம் வந்திடும் வசந்தம்!

சனி, 15 ஏப்ரல், 2017

காத்திடு சீற்றம் வந்திடும் வசந்தம்!

உள்ளத்தி லெரிகின்ற கனலது சீற்றம்
உனைச் சார்ந்தோரை பழிவாங்கிடுவது சீற்றம்
முள்ளாகக் குத்திடும் சீற்றமதை யடக்கிடவே
முன்னேவரும் உன்னிடம் கண்ணியத்தொடு மதிப்பு!

தன்னைத் தான்காக்கின் காத்திடுக சீற்றம்
தன்மீது அன்பின்றேல் வந்திடுமே சீற்றம்
உன்மீது வெகுளிதான் பிறர்கொண்டு பார்க்க
உன்சீற்றம் உனையழிக்கும் பலவாகப் பாரு

தூதர் முஹம்மதிடம் ஒருவர் வந்து
தூதரே கூறுங்கள் அறிவுரை யென்று
வந்தவர் கேட்டிட தூதர் பன்முறையன்று
வாகாய்ச் சொன்னார் நீக்குக சீற்றமென்று

சீற்றம் தந்திடும் பெரிதாய்த் துன்பம்
கொதித்திடும் குருதியும் அல்சரும் பலவும்
தூற்றிடு நீமிருகக் குணமது நன்றாய்
தூக்கியெறிந்திட சீற்றம் இக்கணம் வென்றாய்

விடத்தினும் கொடிய சீற்றமது அடக்கிட
விடாதுநீயும் தொழுதிடு இறையைச்  சீராய்
விட்டிட சீற்றம் வந்திடும் வசந்தமுன்னில்
வல்லள் நபியின் போதனையுங் காத்தாய்!

-கலைமகன் பைரூஸ் (வெலிகம)

கருத்துரை
Baskaran Ranganathan சீற்றம் தவிர்க்கவே சீறி இட்டீர் தமிழ்ப்பா
கூற்றம் விரைவில் அழைக்கும் இயல்பாம்
மாற்றம் கொள்ள வேண்டும் சினம் தணிக்க

ஏற்றமாம் வாழ்வாம் என்றே இனிதுரைத்தீர்
தேற்றமாய் உணர்ந்தோர் தவிர்த்தார் சினம்
உடலம் கெடும் இயல்பும் சுற்றம் நீங்கலுமென 
படப்பட உள்ளம் உணர்த்தியது உம் கவிதை 
அண்ணல் நபி மொழியும் கூறி காக்க சீற்றமென
தன்னத் தான் காக்கின் சினம் காக்க என்ற
சீரிய வள்ளுவ மொழியும் இட்ட பா பெரிதினிது.


15.04.0217




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக