It கலைமகன் கவிதைகள்: தமிழுக்குப்பெருமை - இலக்கணப் பெருமை!

ஞாயிறு, 16 ஏப்ரல், 2017

தமிழுக்குப்பெருமை - இலக்கணப் பெருமை!



குறிப்பு -

நிலாமுற்றக் குழுமத்தில் - கவியரங்கில்  இந்தியப் பெரும்புலவர்கள் 107 பேருடன் நானும் கலந்து கொண்டேன்.
“தமிழுக்குப் பெருமை - இலக்கணப் பெருமை” எனும் தலைப்பில் எனது கவிதையைப் பதிவிட்டேன். போட்டியைக் கண்டதும் சடுதியாய்...

முகநூலின்கண் என் இப்பதிவினைக் கண்டு, தட்டித்தந்திருந்த நல்லுறவுகள் அனைவருக்கும் எனது நன்றிப் பூத்தூவல்கள் உரித்தாகட்டும்.


தமிழன்புடன்,

கலைமகன் பைரூஸ்,
“தமிழ் அறிவகம்”,
மதுராப்புர, தெனிப்பிட்டிய,
வெலிகாமம் - இலங்கை.

16.04.2017



தமிழ் வணக்கம்
-------------------------------
அகத்துளொன்றாய் அன்பினிணைப்பாய் அகிலமீதில் ஆதவனாய்
ஆடாதென்றும் அமுதினையள்ளித் தெளிக்கும் எந்தன் தமிழே
பகுத்துப் பலவாறு படையல்கள் பலதந்து பூதலத்தோர்
பண்புறவே பணியாற்றும் பைந்தமிழே யுனக்கெந்தன் வணக்கம்

தலைவர் வணக்கம்
--------------------------------------
செந்தமிக் கவியே செழுந்தமி ழணங்கே சங்கத் தமிழினியே
சுவைதரும் பாவரசியே சோழத் தமிழினியே கவிதாயினியே
விந்தைமிகு கவிபுனையும் வித்தக ஜெய ஜெயாருமக்கு
விருந்தாம் நம்நற்றமிழ் வணக்கம்!

சபை வணக்கம்
------------------------------
சோறுடைத்த சோழமண்டலத்துச் சொந்தங்களனைவர்க்கும்
சுகமான கவிதந்து தட்டிக்கொடுக்கு மெங்கள் முத்துப்பேட்டை
வீறுடைத் தமிழின் அரங்காவலனே மாறானார் பெருந்தகையே
வாழத்தமிழ் முகநூலின்கண்ணும் கருத்தொடுள்ள கவியுறவுகளே

நிலாமுற்றத்து நிருவாகிகளாய்த் தமிழ்ப் பணியாற்றும் நற்றமிழ்
நயக்குமெங்கள் பெரும்புலவர்களே நிலாமுற்றம் காணு மெங்கள்
வீழாத தமிழுறவுகளே தனியனின் தங்கத்தமிழினால் உமக்கெலாம்
விருப்புடனே நற்றமிழில் நவின்றேன் நானும் வணக்கம்!

பொதுத்தலைப்பு - தமிழுக்குப்பெருமை

துணைத் தலைப்பு - இலக்கணப் பெருமை
--------------------------------------------------------------------------------

எண்ணத் தமிழ் என்னைத் தமிழ் எனக்குத்தமிழ்
ஏற்றத்தமிழ் எடுப்பாய்த்தமிழ் செந்தமிழே
அன்னைத் தமிழ் அழகுத் தமிழ் அகிலத்தமிழ்
அரவணைக்கும் என்னில் செந்தமிழே!

ஒல்காத்தமிழ் தொல்காப்பியத் தமிழ் எனக்குள் ஒளியே
ஒருமைத்தமிழ் ஒப்பில் இலக்கணத் தமிழ் இனிதே
சொல்லும் தமிழ் வெல்லுந்தமிழ் இனிமைத் தமிழமுதே
வள்ளுவத் தமிழ் நல்லிலக்கணமே!

இயற்றிமிழ் இலக்கணங் கண்டிட்ட நற்றமிழே
இலக்கணம் ஐந்தினை வாகாயமைத் திட்டமொழியே
இறைவன் அருள் இங்கிதமாய் கிடைத்த மொழியே
இல்லை கரையேதும் இலக்கணமிதிலே!

உயிராய் மெய்யாய் உயிர்மெய் யாயுதமாய்
முதலும் சார்பும் மொழியினிற் சுமந்தாய்
பயிராய் என்றும் பசுமையொடு உள்ளாய்
பைந்தமிழிலக்கணம் நீயே இப்பாரில்!

வையத்தெழு மொழிகள் தோற்றிடச் செய்தனையே
வடவேங்கடம் தென்குமரியாயிடை வந்தனையே
செயார் யாரும் உனைப் போன்ற இலக்கணையே
வலிமெலி யிடை இலக்கணம் நீயலவோ?

அண்ணமொழி அகிலத்து நீயன்றி ஏதின்று
அணையாத பலமொழிகள் உன்னிடத்து
வண்ணத் தமிழமுது முப்பஃதும் நீயாமே
வளமான “ழ”கர மொழி நீதமிழே!

இலக்கணம் இலக்கியத்திற் கென்பர் மாந்தர்
இலக்கண மின்றேல் ஏதிற்றான் பெருங்காதல்
இத்தரையின் தமிழுந்தன் இலக்கணச் செழுமை
இங்கேதுள்ளது இன்றமிழ் மொழியே!

ஆகாசா வெலாம் மொழியே இஃதுபோல்
அழகான ஓரெழுத்துள்ள இலக்கணையே
ஆகாது நீயின்றி தமிழுந்தான் வெல்ல
நற்றமிழின் இலக்கணமே வெல்வாய்!

நன்றியுரை 
----------------------
கன்னியாம் கவிதைக் கவியரங்குக் கவிதை
களங்கமில் நற்றமிழில் எழுதிடவே எனைத்
தட்டியே தந்திட்ட கவிக்குழுமத்திற்கு
தனித்தாகம் கொண்ட தமிழனென் நன்றி!


- கலைமகன் பைரூஸ்


கவிதைக்கான தட்டிக் கொடுப்புக்கள்-

1. சிறீ சிறீஸ்கந்தராஜா
-------------------------------------------
உயிராய் மெய்யாய் உயிர்மெய் யாயுதமாய்
முதலும் சார்பும் மொழியினிற் சுமந்தாய்
பயிராய் என்றும் பசுமையொடு உள்ளாய்
பைந்தமிழிலக்கணம் நீயே இப்பாரில்...!

-----------------------------
-----------------------------
அருமை!
வாழ்த்துக்கள்!!!



2. கவிக்கமல்
-------------------------
இனிக்குதே தேனை விட சுவையாய்.


3. இஸ்மாயில் ஏ. முஹம்மத்
---------------------------------------------------
மிக அருமை


4. அன்பு ஜவஹர்ஷா
---------------------------------------
மொழியும், இலக்கணமும், ஆக்கமும் கலந்து, அழகுணர்வோடு அருமையான படைப்பு. இது உங்களால் மட்டுமே முடியும்.

வாழ்த்துக்கள்!


5. மொஹமட் யூசுப்
-----------------------------------
அருமைப் படைப்பு
தமிழ் இனிமை அமைப்பு
மகிழ் மொழி படைப்பு
அமிழ்தினி பதிப்பு
அருமை வாழ்த்துக்கள்!


6. அபூ அப்கான்
----------------------------
மிக அருமை


7. முத்துப்பேட்டை மாறன்
------------------------------------------------
சிறப்பான கவி வரிகள்


8. பன்னீர்ச் செல்வன் - தமிழ்க்கவி
---------------------------------------------------------------
சிறப்புக் கவி

மிக மிக அருமை


9. கற்றுப்பட்டு பி.கேசவன் கே.அ.தாரா 
------------------------------------------------------------------------
சோறுடைத்த சோழமண்டலத்துச்
சொந்தங்க ளனைவருக்கும்
சுகமான கவிதந்து தட்டிகொடுப்பார் முத்துப்பேட்டை மாற னென்றால் பாண்டியநாட்டு 
செட்டிக்கவி கொட்டியவன் செட்டிநாட்டிர்க்கும் இல்லையோ?
இந்த குட்டிக்கவிஞனையும் தட்டிக்கொடுக்கும் முத்துப்ட்டை மாறன் பாவலரும் செய்தனையும் மறந்தீரே ஏனோ?

அருமை அருமை பாவலரே வாழ்த்துக்கள்!

மிக்க மகிழ்ச்சி பாவலரே!



10. வஃபா பாரூக்
-----------------------------
நீண்ட இடைவெளியை மீட்டுவிட்டது
உங்கள் தேன்த்தமிழ்க் கவியே!

அன்பு ஜவாஹர்ஷா, தன் பக்கத்தில் இக்கவிதையைப் பகிர்ந்திருக்கிறார். அவருக்கு எனது நன்றி!

 (5000 இற்கும் மேற்பட்ட உறவுகள் அவர் பக்கத்தைப் பார்வையிடுகின்றனர் என்பதில் பெருமகிழ்ச்சி எனக்கு)

11. புலவர் Baskaran Ranganathan பாஸ்கரன் ரங்கநாதன்
---------------------------------------------------------------------------------------------
ஒன்றா இரண்டா உம்பா நயமுரைக்க
குன்றா அழகே சொற்சுவை கூட்டியிங்கே
அன்னை தமிழுக்கே அலங்கல் சூட்டினாய்
எண்ணித் தான் எத்தனை சிறப்புரைத்தாய்
பண்னின் பழகு தமிழுக்கே இங்கு பலவாய்
அருவிப் பாயந்தனைய தடைபடா சொற்கள்
மருவி இன்பம் சேர்க்கும் மகிழ்ந்து படிக்க
எண்ணிலா நல்முறைத்தான் நற்றமிழுக்கே

---------------------------------------------------------------------------------------------------------------------



தத்துவக் கவி
-------------------------

உணர்ச்சி ததும்ப
உண்மையை உரைத்ததனால்
முல்லாக்கள் பல்லோரின்
முதுகுகள் குனிந்தன வில்லாய்
இக்பால்,
உன் கவிகள்
இன்னும் வாழ்கின்றன
தத்துவ முத்துக்கள் என...

-கலைமகன் பைரூஸ்


---------------------------------------------------------------------------------------------------------------------

ஆசானுக்கு மாணாக்கனின்
வாழ்த்துக்கவி
----------------------------

தோளோடு தோள் சேர்ந்து
இதயங்கள் இரண்டும் இணைந்து
அகங்குளிர்ந்து இந்நாளில்
மணநாளை நினைவிருத்தி
நேர்கொண்ட பார்வையொடு
இருப்பது போலென்றும்
ஆல்போல் தழைத்து
அருகுபோல் வேரோட
அல்லாஹ் அருள்கவென
ஏந்தினன் கரங்கள்
மாணாக்கன் உங்கள்
கலைமகன் பைரூஸ்

-கலைமகன் பைரூஸ்
09.09.2017

---------------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக