It கலைமகன் கவிதைகள்: அது! - கவிஞர் அஷ்ரஃப் ஷிஹாப்தீன்

வெள்ளி, 7 ஏப்ரல், 2023

அது! - கவிஞர் அஷ்ரஃப் ஷிஹாப்தீன்


பச்சைத் தசை புசிக்கும்
இரத்த வெறி பிடித்த ஒரு மிருகத்தைப்போல்
உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறது
அது

உனது ஒரு சொல்லில் -
எழுத்தாக
குரலாக
வெளிவரும் ஒரு சொல்லில்
நீ சறுகும் வரை
அவதானித்துக் கொண்டேயிருக்கிறது
அது
இனம், மதம், மொழியென
எதையும் கண்டு கொள்ளாதது அது
கோடிப்பேர் நின்று கொடுமை என்றாலும்
அதுவே சரியென
அதிகார மொழி கொண்டு அறிவிக்கும்
அது

உனது புலன்கள் யாவும்
உயிர்ப்புடன் இருந்தாலும்
பார்வையற்றவாராய்
கேள்வி அற்றவராய்
குரல் அற்றவராய்
உள்ளார்ந்த உணர்வுகள் அற்றவராய்
நீ இருக்கும் வரை

அதாவது
ஒரு நடமாடும் பிணமாக
நீ வாழ்ந்து கொண்டிருக்கும் வரை
உன்னை ஒன்றுமே செய்யாது
அது!

- கவிஞர் அஷ்ரஃப் ஷிஹாப்தீன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக