It கலைமகன் கவிதைகள்: என்பாகத்தை எனக்கு வைத்துவிடு! (மொழிபெயர்ப்புக் கவிதை)

ஞாயிறு, 13 அக்டோபர், 2013

என்பாகத்தை எனக்கு வைத்துவிடு! (மொழிபெயர்ப்புக் கவிதை)

கள்ளமாய் ரகசியமாய் அருகேவந்து சொன்ன
கதையை மீண்டும் கட்டுங்கள்...
பாழடைந்த நாளொன்று நாங்கள் தனியாக நின்ற
இடத்திற்குப் போய் உட்காருங்கள்...
யார்? எதற்கு? ஏன்? இங்கே இன்று...?
எனக் கேட்டால் பொய் சொல்லுங்கள்...
எக்காரணம்  கொண்டும் போகாமல் நான்
வரும்வரை காத்திருங்கள்...


சென்ற காலம்  உள்ளத்தை உசுப்பினாலும்
துக்கத்தை மறந்து விடுங்கள்...
அதைப் போன்று கண்ணீர்த் துளிகள்
இன்று இல்லை
நான் கவிபாட வருவேன்...
நீண்ட காலத்திற்குப் பின்
நெற்றியை எனது நெற்றியில் வைத்து
ரகசியமொன்றை எழுதுங்கள்...
அன்பே நாம் முதலில் சந்தித்த
அன்றைய பொழுது
நினைவில் இருக்கிறதா சொல்லுங்கள்...

சின்னஞ்சிறு நட்சத்திரக் கண்களால் நகைத்து
அவசரமாய் முத்தம் தாருங்கள்...
அன்றுபோல் இன்னும் என்னால் முடியும்
கோபமா எனக் கேட்க...
மனதில் என்னைப்பற்றி நீண்ட காலமாய்
வைத்த அன்பைக் கண்டுகொள்ள
நான் வருவேன் நீ சிந்திய கண்ணீரில்..
என்பாகத்தை எனக்கு வைத்துவிடு!

சிங்களத்தில்: சமன் எதிரிமுனி
தமிழில்: கலைமகன் பைரூஸ்

2013-10-13 8:35


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக