It கலைமகன் கவிதைகள்: கரங்கொடுப்பார் ஆருளரோ?

வெள்ளி, 25 அக்டோபர், 2013

கரங்கொடுப்பார் ஆருளரோ?

உள்ளத்து வேதனைகள் தீப்பிழம்பாக
உயரிய சாதிக்கொடுமைகள் குழம்பாக
எள்ளளவும் மதியாதார் பாந்தளாக
ஏதுசெய்வம் எனவழிகிறது நீரருவி!

கருவினில் சுமப்பவள் அலைதுரும்பாகி
களங்கத்திற்குள் சிக்குண்ட மதியாகி
உருமுவாரின் வன்கொடுமைக் காளாகி
உயர்வுகாணுதற்காய் வழிகிறதுபேராறு!

சீதனத்து வயது தலையிடியாகி
சீர்வரிசை சேர்ப்பது எங்ஙனமென்றாகி
பேதைமனது புண்ணாகி - சீழாகி
பாராரின்றி வழிகிறது கண்ணீராகி....

மணஞ்செய்து மாதவத்தாளாகி அப்பால்
மணமிலாத இல்லத்தாளாகி - பின்னே
குணமேது மிலாதார் இவரலவா என்று
குந்தியிருக்க வருமே நடுங்கிடுநீர்!

சிசுவாகி மதலைதானாகி மடந்தையாய்
சிரசினிற் சுமந்திடும் மணவாட்டியாய்
பேசுபொருள் தானாகி பெரும்பொருளாகி
பரிதவிப்பாளின் விழிகள் ஓட்டுகின்றனநீர்!

பாராரின்றி பாருமின்றி பணமேதுமின்றி
பரிதவித்திட பாவையவள் துன்புற்றேங்க
வாராதோ குருதியென கண்ணீரருவி
வாங்குவளை கைகொடுப்பா ராருளரோ?

‘நோக்காடு யான்பட்டு நோக்குங்கால்
நொந்தழுவாள் முந்தானை விரிப்பாள்
எக்கேடு கெட்டாலென்ன’ என்றாயின்
எரிவாளிவள் கனல்நீர் அழித்திடும்பார்!

-கலைமகன் பைரூஸ்17/04/2013 2:36

நன்றி - சுடர்ஒளி




கொடுமைகளைக் கண்டு கொதித்தெழும் கவிஞனின் கவிவரிகள் அருமை.......உடுவை


ராஜகவி ராஹிலின் கருத்துக்கள் மேலுள்ளவை. (24-11-2013)

Imthiyas Mohamed -  Nice poem

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக