It கலைமகன் கவிதைகள்: இது கவிதை!

ஞாயிறு, 27 ஏப்ரல், 2014

இது கவிதை!

உறங்கும் உள்ளுணர்வினை
உசுப்பி, உயிர்ப்பித்து
உரம் பெற வைத்தல் கவிதை!

ஊசிமுனை உடல்
நாசித்துளை அனல்
வீசியெழும் மொழிகவிதை!

கூரிய வாள் சிரம்
கூறாய் விழ, வலு
வாறாய் அமைதல் கவிதை!

அழும் சிறு குழவி, கூன்
விழும்படு கிழவியும்
சிரித்திடல் சிலிர்த்தெழல் கவிதை!

சாக்கடை நினைவுகள்
போக்கற வடங்கி, நன்
நோக்குற வைத்தல் கவிதை!

ஒற்றுமை வடம், பலம்
அற்றிடாத் திடமனம்
பெற்றிடச் செய்தல் கவிதை!

சிந்தனைப் பட்சிதன்
கற்பனை வான்முகில்
ஒப்பனை தீட்டினால் கவிதை!


தேன், பால், கனி சுவை
திகட்டிடா வண்ணம் சீர்
கொட்டும் வா றமைதலும் கவிதை!

பூக்களின் புட்களின்
புதுமணப் பின்னலில்
பூன்னகை பூப்பதில் கவிதை

படித்தவர் பாமரர்
படித்துச் சுவைத்ததைப்
பத்திரப் படுத்தினால் கவிதை

காலச் சுழற்சியில்
கருங்கற் பாறையில்
பொழிந்தாய் அமைதலே கவிதை!

நன்றி - தினகரன் வாரமஞ்சரி 27-04-2014

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக