It கலைமகன் கவிதைகள்: புன்னியாமீன் எனும் ஆளுமை!

வியாழன், 10 மார்ச், 2016

புன்னியாமீன் எனும் ஆளுமை!

பிரபல எழுத்தாளும், ஆசிரியப் பெருந்தகையும், பன்னூலாசிரியருமான கண்டி, உடத்தலவின்னை மடிகேயைச் சேர்ந்த பீ.எம். புன்னியாமீன் இன்று இயற்கையெய்தினார். “இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்” அவரின் நினைவாக இந்தக் கவிதை எழுதப்படுகின்றது.


மைதியின் இருப்பிடமாய்
நற்குணத்தின் அமைவிடமாய்
மமதை எள்ளளவும் இலதாய்
பிறர் வெற்றியில் இணைந்தே
தட்டிக் கொடுப்புகள் செய்தே
இருந்தவர்தான் இந்த
நல்லாளுமை புன்னியாமீன்...

சாதிகளைச் சாடி - பிறர்
எள்ளுவோரைச் சாடி
கதைகள் பற்பல சொல்லி
எத்தனை யெத்தனையோ
பணிகள் செய்து
கேட்கக் கடவாத பேச்சுக்கள்
சரமாரியாய்க் கேட்டும்
எடுத்த காலை பின்வைக்காது
நல்லன நிலைக்க முன்னின்றவர்தான்
இந்த ஆளுமை புன்னியாமீன்...

பற்பல மகுடங்களில் பற்பல
பனுவல்கள் தந்திட்டவர்
பற்பல மகுடங்களில் பற்பல
ஆக்கங்கள் ஊடகங்கள் பலதிலும்
காலத்தின் தேவைகருதி - தனக்கே
உரித்தாம் பாணியில் தந்தவர்தான்
பன்னூலாசிரியர் எனும் நாமம்கொள்
இந்த ஆளுமை புன்னியாமீன்..

அரசியல் பாடம் கற்றுக்கொடுத்தார்
எனைப் போன்றோர் உயர்ந்திடக் காலாய்
என்றும் நின்றார் - வயதில் குறைந்தோரை
தம்பியென்றே அழைத்தார் - அவர்தம்
ஆற்றல்களை சிரமேற் கொண்டார்
எழுத்துக்களை எங்கும் எதிலும் ஆணியாய்
பசுமரத்தாணியாய் அடித்தார் - உளங்கள்
என்றும் நினைக்க
அழியாதன பலவும் தந்தார்...
புலமைமிக்க புன்னியாமீன்...

தம்பியென்றே எனை அழைத்து - தன்
சிங்கள - தமிழ் மீள்மொழிவுகளை
எனக்கே தந்து - ஏன் நேரத்திற்கு பணமுமீந்து
வலைத்தளப் பணியும்
எனக்குத் தந்து மகிழ்ந்தீர்!
உம்ராவுக்குச் செல்வதற்கு முன்
எனை அழைத்து துஆ இரக்கச் சொல்லி
நெடுநேரம் கதைத்துச் சென்றீரே....
மதீனமா மாநகரில் பிணியால் அவதியுற
உளம் நோவுகொண்டது...

வீட்டுக்கு வந்ததும் உங்களிடம் கதைக்க
அவா கொண்டு அழைத்தேன் - உறங்கினீர்
நீங்கள் நலம் பெறவே நாமெலாம்
துஆ இரந்தோம் வானோக்கி கரங்களுயர்த்தி
இன்று நீங்கள் ‘பொய்துனியாவைவிட்டு”
நெடுதூரம் சென்றிருக்கிறீர்கள்...
உங்கள் ஆக்கங்களால் நெடிது வாழ்வீர்கள்...
சுவனத்து பூங்காவில் நீங்கள் இருந்திட
அல்லாஹ்விடம் துஆ இரக்கிறோம்....

-“கவித்தீபம்” இஸ்மாயில் எம். பைரூஸ்
10.03.2016


நன்றி

- தினகரன் வாரமஞ்சரி http://archives.thinakaran.lk/Vaaramanjari/2016/03/13/?fn=f16031310
-விடியல் http://www.vidiyal.lk/ஆக்கங்கள்/9632-புன்னியாமீன்-எனும்-ஆளுமை
-இம்போர்ட்மிரர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக